Friday, December 30, 2011

ஆண்டவன் திருவிளையாடல் ‍- 4a குருவைத் தேடி-2

குரு அடையாளம் தெரிந்த சில நாட்களில் மீண்டும் குழப்பம் தலை தூக்க ஆரம்பித்தது. நம் குருவுக்கும் நாம் கும்பிடும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? இருவரையும் அருவமாகவே உணர முடிகிறது. நேரில் இருக்கும் குரு இருந்தால் நன்றாக இருக்குமே என்ற சிந்தனை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

எனது குருதேவரிடமே மீண்டும் பிரார்த்தனை ஆரம்பித்தது. எனக்கு தங்கள் ஆசியை கொண்டுவந்து கொடுப்பவர் இன்னார்தான் என அடையாளம் காட்ட வேண்டினேன்.

இந்த நேரத்தில், எனக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. உண்மையில் மனம் உடைந்து விட்டது. பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட காலம் என்பதால், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். 45 நாட்கள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் சென்றுவிட்டேன்.  சம்பளம் தருவார்களா என தெரியவில்லை.  சோதனை மேல் சோதனை. குருவின் மீது பாரத்தைப் போட்டு இருந்தேன்.

அப்போது மன அழுத்தம் மிக அதிகமாகி கடவுள், குரு, சுற்றம்,  நட்பு எல்லாம் என்னை விட்டு விலகி அனாதை ஆகிவிட்டதுபோன்ற ஒரு உணர்வு ஆட்கொண்ட நேரம்.

அப்போது ஆனந்த விகடன் புத்தகத்தில் ஒரு ராஜ யோக பயிற்சியாளர் பண சம்பத்தை அளிக்கும் பூஜை கற்றுத்தர ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார். ஜாதகத்துடன் விண்ணப்பிக்க சொல்லி இருந்தது.

இதற்கு விண்ணப்பித்து, அந்த பூஜைகள் செய்து ஏதாவது மாறுதல் ஏற்படாதா? என்ற நப்பாசையில் ஒரு விண்ணப்பம் தட்டி விட்டேன். சில நாட்களில் அதை மறந்தும் விட்டேன்.

உடல்நிலை ஓரளவு தேறி, மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்த சில நாட்களில் எனக்கு அந்த ராஜ யோக பயிற்சியாளர், அந்த பூஜை முறை கற்றுக்கொள்ள எனக்கு தகுதி இருப்பதாகவும், உடனடியாக கிளம்பி வரவும் என கடிதம் அனுப்பி இருந்தார்.

அந்த கடிதத்தை படித்த விநாடியில் இருந்து எனக்கு ஏதோ ஆகிவிட்டது. மனம் ஒரு நிலையில் இல்லை. கட்டுப்பாடு இழந்து சிந்திக்க ஆரம்பித்தது. எப்படியாவது போக வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக‌ இருந்தது. ஆனால் பணம் செலவளித்து இதை கற்றுக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை அலைக்களித்தது.

மறுநாள் மீண்டும் மனதில் ஒருவிதமான வித்தியாசமான உணர்வு பரவுவதை உணர்ந்தேன். இப்போது உடலிலும் சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது. நரம்புகளில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டதைப் போன்ற ஒரு உணர்வில் மயக்கமான நிலைக்கு போய்விட்டேன்.

எனது அலுவலக நண்பர் ஒருவர் என்னை கவனித்து, உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டினார். நான் நடந்த விசயங்களை சொல்லி அந்த ராஜ யோக பயிற்சியாளர் அனுப்பிய கடிதத்தை காண்பித்தேன்.

அவர் உடனடியாக ஒரு ஆஞ்சனேய உபாசகரின் முகவரியைக் கொடுத்து அவரிடம் சென்று பார்க்கும்படி கூறினார். அங்கு சென்றதும் அவர் என்னிடம் அந்த கடிதத்தை வாங்கி பார்த்து, எனக்கு திருஷ்டி பாதிப்பு இருப்பதாகவும், சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறி அது செய்ய வைத்தார்.

அப்போதிலிருந்து தொடர்ந்து சுமார் 10 நாட்கள், அந்த பயம் போன்ற  உணர்வு தொடர்ந்து கொண்டிருந்தது. எங்கள் தியான ஆசிரியரிடம் ஏதாவது தியானம் மூலம் இதை சரி செய்ய முடியுமா என்று வினவினேன். அவர் அந்த ஆஞ்சனேய பக்தரிடம் தொடர்ந்து சென்று வர ஆலோசனை வழங்கினார்.

இந்த நிலையில் எனது சகஜ மார்க்க நண்பர்கள் மூலம் அவர்களின் தியானமுறையில் இதை சரி செய்ய முடியுமா என முயற்சித்தேன். ஆனால் அவர்கள் தியானம் கற்றுக் கொண்டால்தான் அது குறித்து முயற்சி செய்ய முடியும் என்று எனக்கு சுமார் ஒரு மணிநேரம் அதன் முக்கியத்துவதுவம் குறித்து விளக்க உரையும் கொடுத்தார்கள். எனக்கு தியானம் புதிதாக கற்றுகொள்ள விருப்பம் இல்லை என கூறி விட்டு அப்போது வந்து விட்டேன்.

ஆனால் மறுநாள் என்னால் வீட்டில் இருக்க முடிய வில்லை. எப்படியாவது சகஜ மார்க்க தியானம் கற்று கொள்ள வேண்டும் என்று என் மனதில் இருந்து திரும்ப திரும்ப சிந்தனை வந்து கொண்டிருந்தது. அது ஒரு மிகப் பெரிய உந்து சக்தி போல என்னைத் தள்ள ஆரம்பித்தது. தாங்க முடியவில்லை என்னால்.

உடனடியாக எனது தியான ஆசிரியரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இருக்கும் நிலவரம் குறித்து விரிவாக எடுத்துரைத்து, சில நாட்கள் சகஜ மார்க்க தியானம் செய்து பார்த்துவிட்டு வருகிறேன். அதற்கு தங்கள் அனுமதி தேவை என விண்ணப்பித்தேன். அவர் என்னை நேரில் வரும்படி பணித்தார்.

எங்கள் குழு தியான அறையில் தியான ஆசிரியர் வருகைக்காக காத்திருந்தேன். அங்கிருந்த அனைத்து பொருட்களையும் ஒரு முறை நன்றாக பார்த்துக் கொண்டேன். மானசீகமாக என் குருநாதர் விக்கிரகத்துக்கு முன் மண்டியிட்டு என்னை இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்கவும் எந்த நிலையிலும் எனக்கு துணையாக இருக்கும்படியும் வேண்டினேன்.

சிறிது நேரத்தில் தியான ஆசிரியர் அந்த அறைக்குள் வந்தார். நேராக குருவின் மூர்த்திக்கு ஆரத்தி காண்பித்து என் எதிரில் வந்து அமர்ந்தார். என்னை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து, எந்த தியானமானாலும் விடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படி பாதியில் விட்டு செல்லக்கூடாது. மாற்றி மாற்றி தியானம் செய்தால் அது நல்லதல்ல என அறிவுரை கூறினார். பிறகு வேறு தியானம் செய்வது என் சொந்த விருப்பம் எனவும், சிறிது நேரம் தியான அறையில் ஓய்வு எடுத்துவிட்டு செல்லும் படியும் பணித்து சென்றுவிட்டார்.

அவர் தியான அறையை விட்டு அகன்ற விநாடியில் என் மனதில் இருந்த அந்த அரிப்பு அகன்று விட்டது. சுமார் 15 நிமிடங்கள் அந்த தியான அறையில் அமைதியாக இருந்த பிறகு எனக்கு எல்லாம் சரியாகிவிட்டது போன்ற ஒரு உணர்வு. மனதில் ஒரு தெளிவு. என் குருநாதரின் பரிபூரண ஆசி எங்கள் தியான ஆசிரியர் மூலம் எங்களுக்கு வருவதை குறிப்பால் உணர்த்தவே இந்த நிகழ்ச்சி நடந்ததுபோன்ற ஒரு தோற்றம் மனதில் ஏற்பட்டது. வாழ்வோ சாவோ இனி நம் குருதேவருடன் தான் என மன தெளிவு வந்தது.

அன்று முதல் எங்கள் தியான ஆசிரியரை காணும் பார்வை மாறியது. அவர் வெறும் தியானம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மட்டுமல்ல. குருதேவரின் அருளை அனைவருக்கும் ஏற்று தரும் ஒரு கருவி எனவும் தெளிவாக புரிந்தது. என் பிரார்த்தனைக்கு விடை என் கண்முன்னால் இருந்தது.

பிறகு தொடர்ந்து 3 மாதங்கள் சில பரிகாரங்கள் வீட்டில் செய்து அந்த ஆஞ்சனேயர் உபாசகர் மூலம் தாயத்து செய்து அணிந்த பிறகு பூரண குணம் கிடைத்தது.

சதுரகிரி நாயகனே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

Friday, December 23, 2011

ஆண்டவன் திருவிளையாடல் ‍- 4 ‍- குருவைத் தேடி.. 1

என்னதான் நாம் கடவுள்மீது பக்தி செலுத்தினாலும் ஒரு குரு இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என மனதில் அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனாலும் யாரை குருவாகக் கொள்வது எனவும் மனதில் ஒரே குழப்பமாகவும் இருந்தது.

அப்போது எனது நண்பர்கள் சிலர் சகஜ மார்க்கம் எனப்படும் ராமச்சந்திரா மிஷனில் தியானம் செய்பவர்களாக இருந்தார்கள்(இன்னும் இருக்கிறார்கள்). அவர்களை அவ்வப்போது சென்று அவர்கள் மணப்பாக்கம் ஆசிரமத்தில் சந்திப்பேன்.

அந்த ரம்யமான சூழல் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அவர்கள் மார்க்கம் சார்ந்த சில புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும் தியானம் கற்றுக்கொள்ள மிகவும் தயக்கமாக இருந்ததால் கற்றுக் கொள்ளவில்லை. பலவிதமான விசயங்களைப்பற்றி விவாதங்கள் செய்வோம். அதில் கடவுள், பக்தி, தியானம், யோகம் இவைதான் அதிகம் இருக்கும்.

இந்த சூழலில் எனது குரு தேடலைப் பற்றி தெரிந்த அந்த நண்பர், கடவுளிடம் தீவிரமாக பிரார்த்தனை செய்தால் நல்ல குரு அமைவார் என அறிவுறுத்தினார். நான் அப்போதெல்லாம், சைதை காரணீஸ்வரர் ஆலயத்துக்கு அடிக்கடி செல்வதுண்டு. அங்கேயே இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன்.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஆங்கில மருந்துகளை அறவே நிறுத்திவிட்டு ஒரு ஹோமியோபதி மருத்துவரிடம் மருந்து எடுத்து வந்தேன்.

அலுவலகத்தில் ஏற்பட்ட மன அழுத்தம், உடல் நிலையை அடிக்கடி பாதித்துக் கொண்டே வந்தது. சுமார் இரண்டு ஆண்டுகள் ஹோமியோபதி மருந்துகள் எடுத்தும் ஒன்றும் பெரிய முன்னேற்றம் இல்லை.

எனது ஹோமியோபதி மருத்துவர் ஒரு முறை எனது ரத்த அழுத்தத்தை சோதித்தபோது மிக அதிகமாக இருந்தது. அதற்கு மருந்தாக ஆழ்நிலை தியானம் கற்றுக் கொள்ள அறிவுறுத்தினார். வேறு மருந்து எதுவும் தரவில்லை.

உடனடியாக மறுநாள் 23 ஜனவரி 1997 அன்று, மஹரிஷி வித்யா மந்திர் சென்று ஆழ்நிலை தியானம் கற்றுக் கொண்டேன். அப்போதும் எனக்கு ஒரே குழப்பம். இந்த தியானம் சொல்லிக் கொடுப்பவர் தான் எனது குருவா?? இருந்தாலும் ஒரு தெளிவு. நம் பிரார்த்தனைக்கு கடவுள் எப்படி செவி சாய்க்கிறார் என‌ பார்க்கலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.

தியானம் கற்றுக் கொண்ட சில நாட்களிலேயே எனது ரத்த அழுத்தம் சீராகி விட்டது. இருந்தாலும் மருத்துவர் அறிவுரைப்படி தொடர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

அடுத்த ஆறு மாதங்களில் ஆழ்நிலை தியானத்தின் அடுத்த நிலையான சித்திப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இப்போது எனக்கே ஒரு ஆர்வம் வர ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து ஆர்வமுடன், தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

தியானம் தொடர்ந்து செய்துவர எனக்கு மனதின் ஆழத்தில் இவர்தான் எனது குரு என அடையாளம் தெரிந்தது. ஆம்!! ஆழ்நிலை தியானம் செய்வதற்காக பூஜை செய்யும் தவத்திரு பிரம்மானந்த சரஸ்வதி சுவாமிகள்தான் அது.

மனதில் மிக ஆழமாக என் குரு பதிந்துவிட்டார். அவர் அப்போது தன் பூத உடலில் இல்லாவிட்டாலும் அவர்தம் கருணை பூரணமாக வியாபித்திருப்பதை உணர முடிந்தது.

ஜெய் குரு தேவ்...

Monday, December 19, 2011

ஆண்டவன் திருவிளையாடல் ‍ 3a - மாரியம்மன்

சென்னைக்கு வந்த புதிது.  எனது ஒரு நண்பன் ஒருவருடன் இணைந்து ஒரு ரூம் எடுத்து தங்கினோம்.அவர் சில மாதங்களுக்கு முன்புதான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இருந்தார். நாங்கள் இணைந்து ரூம் எடுப்பதற்கு முன் ஒரு கிறிஸ்தவ பாஸ்டர் ஒருவரின் குடும்பத்துடன் தங்கி இருந்தார். என்னை அந்த பாஸ்டருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

என்னைப் பார்த்தது முதல் அந்த பாஸ்டர் தன் மதப் பிரச்சாரத்தை தொடங்கினார். கிறிஸ்துதான் ஒரே கடவுள்; மற்ற அனைத்தும் பேய்; அதை வழிபடுபவர்கள் சாத்தான்கள் என்று சகட்டுமேனிக்கு அவிழ்த்து விட்டார்.

எனக்கே நான் கும்பிடுவது பேய்தானோ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு குழப்பிவிட்டார். நானும் அப்போது அவரிடம் பேசி சமாளித்தாலும் நன்றாக குழம்பிவிட்டேன்.

என் நண்பனும் பாஸ்டரின் அருமை பெருமைகளை பற்றி விலாவரியாக கூறிக்கொண்டிருந்தான். மதம் மாறினால் நம்மை நன்றாக கவனித்துக் கொள்வார்கள், நம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள், வாழ்க்கை விடிந்து விடும் என தூபம் போட்டுக்கொண்டிருந்தான். வாழ்வின் பல பிரச்சினைகளில் இருந்த எனக்குள் முயற்சி செய்தால்தான் என்ன? என்ற சிந்தனைகூட வர ஆரம்பித்து விட்டது.

மேலும் என்னைப் பயமுறுத்த, அந்த பாஸ்டர் ஒரே மாதத்தில் என்னை மதமாற்றம் செய்ய தீவிர பிரார்த்தனை செய்வதாக கூறி கிலி ஊட்டினான்.

எனக்கு சாமி படத்தை பார்த்தாலே பேயைப் பார்ப்பதுபோன்ற ஒரு உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. உலகமே எனக்கு ஒரு வித்தியாசமாக இருப்பது போன்ற ஒரு உணர்வு ஆட்கொண்டது.

இந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமாக ஆகிக் கொண்டே வந்தது. இரண்டு வாரங்களில் தினந்தோறும் ஆஸ்துமா ஊசி போட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

இந்த நிலையில் பல விதமான காட்சிகள் மனதில் பிரமைகளாக ஓடுவதை உணர முடிந்தது. எது கடவுள் என்ற சிந்தனை தீவிரமாக ஆட்கொண்டது.

நாம் அறியும் பெயரும் உருவமும்தான் கடவுளா? இந்த வேறுபாட்டில்தானே மதங்கள் இருக்கின்றன. ஆனால் கடவுள் எல்லாமதத்தவரின் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுகிறாரே? அது எப்படி? கடவுள் என்பது பெயரை உருவத்தை மீறி இருக்கும் ஒரு சக்தியோ?

என் சொந்த அனுபவத்தில் ஏற்பட்ட பல கடவுள் அனுபவங்கள் என் மனதில் ஓடுகின்றன. குழப்பம் .. மேலும் குழ்ப்பம்..

அப்போது என் நண்பன் என் நிலைமையைப் பார்த்து அந்த பாஸ்டரை என் வீட்டுக்கு அழைத்து வந்து பிரார்த்தனை செய்ய சொல்வதாக சொன்னான். நானும் உடன்பட்டேன். எனக்காக, என் உடல் நலனுக்காக அவரும் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு சென்றார்..

மறுநாள், காலையில் உடலில் அத்தனை சக்தியும் வடிந்துவிட்டதுபோன்ற ஒரு பிரமை. மிகவும் அசதியாக இருந்தது. மனம் மிகவும் தளர்ந்திருந்தது.

மெதுவாக எழுந்து பாத்ரூம் சென்றேன்.. ஒரே அதிர்ச்சி.. ரத்தமாக மலவாய் வழியாக போக ஆரம்பித்தது.. மனதில் உயிர் பயம் வர ஆரம்பித்தது.. செத்துவிடுவோமோ என்ற சிந்தனை வந்தது.

உடனடியாக கோவிலுக்கு செல்லவேண்டும் என தோன்றியது. உடனே குளித்து ரெடியாகி இருக்கும் காசை எடுத்துக்கொண்டு மாங்காடு சென்றேன்.

அங்கு சன்னிதி முன் நின்று கோ என தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். வேகுநேர அழுகைக்கு பின், மனதில் ஒரு முடிவு. வாழ்வில் மிக நல்ல நிலைக்கு வந்தால்தான் ஊருக்கு போகவேண்டும். இல்லாவிட்டால் என் தாய் உயிருக்கு போராடினால்தான் என் ஊருக்கு செல்வேன். அதுவரை செல்வதில்லை, என சங்கல்பம் எடுத்துக் கொண்டு திரும்பிவிட்டேன்.

மேலும் சில முறை ரத்தமாக போனது. கவலைப்படவில்லை. ஆவது ஆகட்டும். செத்தால் மொத்த விடுதலை.


சுமார் 2 மணி அளவில் என் அலுவலகத்தில் இருந்து என் நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவர் கையில் ஒரு பேப்பர்.

என் தாயார் மிகவும் சீரியசாக இருப்பதாக ஊரில் இருந்து தந்தி வந்திருப்பதாக சொன்னார். தலைக்கு மேல் வெள்ளம். கையில் காசில்லை. அலுவலகம் சென்று சம்பளத்தில் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு ஊருக்கு புறப்பட்டேன்.

பஸ் ஊரை நெருங்க நெருங்க உடலில் ஒரு புது சக்தி வருவதாக உணர்ந்தேன். வேகமாக வீட்டை அடைந்தால், என் தாயார் வீட்டு வாசலில் உட்கார்ந்துகொண்டிருந்தார். என்ன விசயம் என யாரும் ஒன்றும் கூறவில்லை.

உடனே என்னைக் கிளப்பிக் கொண்டு குடும்பத்துடன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றார்கள். அங்கு வைத்து அப்போது எனக்கு மாவிளக்கு எடுத்தார்கள்..

எனக்கோ ஒன்றும் விளங்கவில்லை. அப்போது என் தாயார் முன் தினம் மதியம் இருக்கன்குடி வந்திருந்ததாகவும், பக்கத்து வீட்டு பெண்ணுக்கு அருள் வந்து உடனடியாக எனக்கு என் தாயார் சீரியசாக இருப்பதாக தந்தி அடித்து வரவழைக்குமாறும் கூறியதாக சொன்னார்கள். நான் இன்னும் இரண்டு நாளில் இங்கு வராவிட்டால் என் உயிருக்கு ஆபத்து என்றும், இப்படி தந்தி கொடுத்தால் மட்டுமே நான் வருவேன் எனவும் கூறி இருக்கிறார்கள்..

எல்லாம் எனக்கு அந்த வினாடியில் விளங்கிவிட்டது. நேற்று என் அம்மாவுக்கு அருள் வாக்கு கிடைத்தது, நான் மாங்காடுவில் பிரார்த்தனை செய்துவிட்டு கிளம்பிய அதே நேரம்.

அந்த காக்கும் தாய் என்னைக் காப்பாற்ற என் தாயை பணித்து இருக்கிறாள்..

மெய் சிலிர்த்தது. உண்மையான கடவுள் உருவத்திலோ பெயரிலோ இல்லை என புரிந்தது. உண்மையான பக்தியுடனும் ஏக்கத்துடனும் எங்கிருந்து என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் அந்த கடவுள் மனிதனுக்கு இரங்குவார் என தெளிந்தது..

ஓம் சக்தி.. இருக்கன்குடி மாரியம்மனே சரணம்.

Thursday, December 15, 2011

அரசு நிர்வாகம்

இன்று நம் தேச‌த்தின் மிக முக்கிய பிரச்சினையாக இருப்பது ஒழுங்கற்ற அரசு நிர்வாகம். அரசாங்கம் செயல்படுத்த எண்ணும் ஒவ்வொரு செயலையையும் இப்படிப்பட்ட ஒரு ஒழுங்கற்ற நிர்வாக அமைப்பு எவ்வாறு செம்மையாக செயல்படுத்த முடியும்.

இதில் குறை எங்கு இருக்கிறது?? நிர்வாக அமைப்பில் சில குறைகள் இருந்தாலும் அதை நிர்வகிப்பவர்களில் தான் பெரும் குறை இருக்கிறது. ஒவ்வொரு சட்டமும் நியதியும் நடைமுறைகளும் மக்களை முன்னிறுத்தி, மக்கள் நலனுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த‌ மாபெரும் உண்மையை மறந்து, இவற்றை வெறும் வார்த்தைகளாகவும், பொது நலனைவிட சுயநலனுக்காகவும் சில தனிநபர் நலனுக்காக‌ இவற்றை வளைக்கவும் மக்களை வதைக்கவும் இவற்றை பயன்படுத்தும் அதிகாரிகளால்தான் பிரச்சினையே.

பல அதிகாரிகள் மக்களை வதைப்பதிலும், பொது நலனை சாகடித்து, தனிநபர்களின் நலன் பேணுவதில் ஆவலாகவுமே இருக்கிறார்கள். இவர்களில் சிலர் அரசியல் நிர்ப்பந்தங்களினாலும் இவ்வாறு ஆக்கப்பட்டு விடுகிறார்கள்.

அதிசயமாக சில உண்மையான அதிகாரிகள் இருந்தாலும் அவர்கள் செயல்படுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் மிக அதிகம்..

இப்படிப்பட்ட ஒரு மோசமான அரசு நிர்வாகம்தான், கோடிக்கணக்கான மக்கள் பணத்தை கையாள்கிறது என்பது ஒரு சோகமான உண்மை.

இவர்களுக்கு எஜமானர்களான நம் நாட்டு அரசியல் தலைவர்களும், இவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்களல்லர். "உன்னாலே நான் கெட்டேன் ,  என்னாலே நீ கெட்டாய்" என்பது அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் பொருந்தும்.

மொத்தத்தில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து பொதுமக்களாகிய நம் பணத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நம் ஜனநாயகத்தில் பொதுஜனமாகிய நமக்கு வேறு போக்கிடம் இல்லை. நீதி மன்றங்களில் தீர்ப்புகள் வர ஆண்டுக்கணக்கில் ஆவதும் நம் மக்களின் நம்பிக்கையை பொய்யாக்கி விடுகிறது.

இந்த லட்சணத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை மேலும் மேலும் செலவு செய்து நலத்திட்டங்களை செயல்படுத்த அரசு முனைந்துகொண்டே இருக்கிறது.

ஓட்டைப்பானையில் எவ்வளவு நீர் ஊற்றினாலும் குடிப்பதற்கு நிற்காது. அது போல இந்த ஓட்டை அரசு நிர்வாக அமைப்பில் மாற்றம் கொண்டுவராமல் புதிய நலத்திட்டங்கள் பலன் தராது.

முதலில் அரசு தன் நிர்வாகத்தை செம்மைப் படுத்தவேண்டும். அதற்கு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

இது சரியாகிவிட்டால் பல விசயங்கள் தானே சரியாகும். அரசு செம்மையாக நடக்கும். மக்களும் சுபிட்சமாக இருப்பர்.. செய்வார்களா??


கடவுளே மஹாலிங்கம், இந்த அரசு நிர்வாக குறைபாடுகள் சரியாக நீங்கதான் ஒரு நல்ல வழி செய்யணும்..

சதுரகிரி நாயகனே சரணம்... சுந்தர மஹாலிங்கமே போற்றி...

Monday, December 12, 2011

எங்கே சென்றுகொண்டிருக்கிறோம்???

போன வாரம் இங்கு கொல்கத்தாவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தீப்பிடித்து சுமார் 93 பேர் மரணமடைந்துவிட்டனர்.

இதற்கு முன்பும் கொல்கத்தாவில் இதே போல் சில இடங்களில் தீ விபத்துக்கள் நடை பெற்று பலர் இறந்திருக்கிறார்கள்.

கொல்கத்தா மட்டுமல்ல, கும்பகோணம் பள்ளி, திருச்சி திருமண மண்டபம், தில்லி தியேட்டர் என்று பல இடங்களில் தீ விபத்துக்கள் நடை பெற்றிருக்கின்றன.

மனித உயிர்களை மிகவும் துச்சமாக மதித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் விட்டதே இந்த அனைத்து விபத்துகளுக்கும் மூல காரணம்.

திட்டமிடாத நகர வளர்ச்சி.. குறுகலான இட வசதிகள்.. நெருக்கடியான வசதி குறைவான இடங்கள்..

இதை கண்காணிக்க வேண்டிய அரசு அதிகாரிகள் வெறும் கடிதம் கொடுத்துவிட்டு தம் கடமையை நிறைவேற்றி விட்டதாக ஜம்பமடித்துக் கொள்கின்றனர்.

மரித்துப்போன மனிதர்களுக்கும் அவர்தம் உறவினர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும் என்ன பதில்?? அரசாங்கம் அறிவிக்கும் சில ஆயிரம் / லட்ச ரூபாய்களால் அந்த இழப்புகளை சரிசெய்ய முடியுமா??

இதேபோல இன்னும் எத்தனை இடங்கள் தீயில் எரிய காத்திருக்கின்றனவோ தெரியவில்லை.

இந்த பிரச்சினையின் ஆணிவேர் நம் அலட்சியம். தேவையான வசதிகளை செய்வதில் அலட்சியம். செய்பவர்களை கண்காணிப்பவர்களின் அலட்சியம். இந்த சூழலில் இருக்கும் சில லஞ்ச லாவண்யமும் மிக முக்கிய காரணம்..

இந்த இறப்புகளுக்கு யாருக்கு என்ன தண்டனை தர?? இவர்களையும் அப்படியே எரித்துவிடலாமா??

எரிந்த பின் எல்லோரும் அழவும், சிலர் மரிக்கவும் ஒருசிலரின் இந்த அலட்சியம் காரணமாகின்றது.

எல்லோரும் பொறுப்புணர்வுடன் நடந்து, தேவையான வசதிகளை, சட்டப்படி செய்து, அதிகாரிகளும் நேர்மையுடன் இதை கண்காணித்து, தேவையான நேரத்தில், சரியான நடவடிக்கைகள் எடுத்தால் இந்த அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.. செய்வார்களா??? காலமும் கடவுளும் தான் பதில் சொல்லணும்..

சதுரகிரியாரே சரணம்... சுந்தரமஹாலிங்கமே போற்றி...

Wednesday, December 7, 2011

சமூக அவலங்களும், கர்ம வினைகளும், ஞானிகளும்

நம் வாழ்வில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்கான மூல காரணம் நம் கர்ம வினைகளின்பால் உள்ளது. அதுபோல நம் சமூகத்தில் நிலவும் பலவித பிரச்சினைகளுக்கான காரணமும் இந்த கர்ம வினைகளை சார்ந்தே இருக்க முடியும். பல தனிமனிதர்களின் கர்ம வினைகள்தான் ஒரு சமூகத்தில் பிரதிபலிக்கின்றன.

கர்ம வினை எனப்படுவது என்ன? இதற்கு பல விளக்கங்கள் இருந்தாலும், நான் எளிதில் புரிந்துகொண்டிருக்கும் சில விளக்கங்கள் கீழே

நாம் செய்யும் நல்ல / கெட்ட செயல்களால் நமக்குள் / அதனால் பாதிப்படைபவருக்குள் உருவாகும் எண்ண அலைகளின் பாதிப்புதான்.

ஒருவித எதிர்பார்ப்போடு செய்யப்படும் / செயல்படும் வினைகளின் விளைவு சிந்தனை மூலம் வெளிப்படும். இந்த சிந்தனைகளின் பாதிப்புதான் கர்ம வினை.

எந்த ஒரு செயலும் நல்லது அல்லது கெட்டது என்று வகைப்படுத்த நம் சிந்தனையில் அந்த செயல் ஏற்படுத்தும் பாதிப்பே முக்கிய காரணம். ஒரு விசயத்தை நாம் மனதளவில் எடுத்துக்கொள்ளும் / ஏற்றுக்கொள்ளும் விதம்(பக்குவம்)தான், அதனால் நாம் பாதிப்படைகிறோமா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.

பாதிப்படைந்தால் கர்ம வினை நிச்சயம். பாதிப்படையாமல் இருக்க பழகிக்கொள்ளவே பல ஆன்மீக சாதனைகள் உதவுகின்றன.


சுருக்கமாக சொன்னால் இந்த கர்ம வினை என்பதும் ஒருவித‌ சக்திதான்.  எனவே The law of conservation of energy இங்கும் பொருந்தும்.

The law of conservation of energy states that energy may neither be created nor destroyed. Therefore the sum of all the energies in the system is a constant.

அதாவது இந்த உலகின் கர்ம வினை என்பது ஒரே நிலையில் இருக்கும். இதை அழிக்க முடியுமா என்பது கேள்விக்குறியதாகினும், இதை நிச்சயம் வேறு திசைகளில் திருப்பிவிட முடியும் என்பது புலனாகிறது.

மனிதர்களுக்கிடையில் இந்த கர்ம வினைகளை அந்த சக்தி நிலையிலேயே மாற்றிக் கொள்ளும் வல்லமை நிச்சயம் இருக்கும். அதை சில ஞானிகள் உபயோகப்படுத்தியும் இருக்கிறார்கள்.

இதுபோல் சமூகத்தில் இருக்கும் கர்ம வினைகளை அந்த சக்தி நிலையிலேயே மாற்றும் வல்லமை இருக்கும் ஞானிகள் இருக்கிறார்களா என தெரியவில்லை. அப்படி இருந்தால் அவர்கள் இதற்குள் ஏதாவது செய்து சமூக அவலங்களை தடுத்திருப்பார்கள்.

அதனால் அப்படி யாரும் இதுவரை இல்லை என்றே நினைக்கிறேன். அப்படிப்பட்டவர்கள் விரைவில் உருவாக வேண்டும். அவர்களால் இந்த சமூகத்துக்கும் அதில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும்.

கடவுளே மஹாலிங்கம் சிறந்த ஞானிகள் நாட்டில் தோன்றி சமூகத்தின் கர்ம வினைகளை சீர்படுத்தி மக்கள் சுபிட்சமாக வாழ அருள் செய்யுங்க..

சதுரகிரியாரே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

Tuesday, November 29, 2011

வாழ்க்கையும் கனவுகளும்...

கனவுகள்.. மூன்று வகை - முதல்வகை இது ஒவ்வொருவருக்கும் இருக்கும் லட்சிய கனவு.. இரண்டாவது வகை நாம் தூங்கும்போது காண்பது.. மூன்றாம் வகை, நம் கற்பனையில் கண்ணை விழித்துக்கொண்டே ஆசைப்படுவது.

லட்சிய கனவு :

அய்யா திரு அப்துல்கலாம் அவர்கள் நம் தேசத்து இளைஞர்களை காணச் சொன்னதுதான் இந்த லட்சிய கனவு. நம் வாழ்வின் லட்சியங்கள் தெளிவாக இருந்தால்தான் வாழ்வின் போக்கும் அது நோக்கி தெளிவாக நகரும்.

நாம் எதுவாக ஆகவேண்டும் என ஆழமாக சிந்திக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிறோம் என்பதால் இந்த லட்சியகனவு ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியத்துவம் பெறுகிறது. 

இந்த கனவுகள் ஒவ்வொருவரையும் அதை அடைய தூண்டி செயல்பட வைக்கும். செயல்பட ஆரம்பிப்பதுதான் லட்சியங்களை அடைய முதல்படி.

துக்கத்தில் காணும் கனவு :

இது நம் மூளை நம் உடல் ஓய்வு எடுக்கும் போது தூக்கத்தில் நமக்கு காண்பிக்கும் ஒரு காட்சி. பல நேரங்களில் நம் உடலில் ஏற்படும் அசதிகளை வெளியேற்ற நம் மூளையில் ஏற்படும் சில ரசாயன நிகழ்வுகளின் விளைவே இந்த கனவு.

சிலருக்கு கனவுகள் ஞாபகத்தில் இருக்கும் பலருக்கு ஞாபகம் இருப்பதில்லை. எல்லோரும் தூக்கத்தில் கனவு காண்கிறார்கள். ஆனால் நாம் தூக்கத்தினுள் சொல்ல முற்படும்போதோ அல்லது தூக்கத்திலிருந்து வெளியேறும் நேரத்திலோ வரும் கனவுகள்தான் பெரும்பாலும் நம் ஞாபகத்தில் இருக்கும் என கூறுகிறார்கள். 

சிலருக்கு கனவுகளில் எதிர்காலத்தில் நடக்கப் போவது பற்றிய விசயங்கள் வருவதுண்டு. சிலருக்கு கனவுகள் வழிகாட்டியாக செயல்படுவதும் உண்டு. நம் மூளையின் சில அற்புதங்களில் இதுவும் ஒன்று. 

கனவுகளுக்கு பலன்கள் சொல்கிறார்கள். எவ்வளவு தூரம் அவற்றை நம்ப முடியும் என்பது சர்ச்சைக்குரியதுதான். சும்மா ஒரு சுவாராசியத்துக்காக அது பற்றியும் நேரம் கிடைக்கும்போது படித்து பார்த்துக்கொள்ளலாம்.

சிலர் கனவுகளைப் பற்றி பயம் கொண்டிருப்பார்கள். அந்த பயமே அவர்களை பல நேரங்களில் பிரச்சினைகளில் மாட்டி விடும். எனவே கனவுகளை நினைத்து பயப்படாமல் அதையும் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை.

பகல் கனவு :

அதாவது விழித்திருக்கும்போதே நம் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு யோசித்துக் கொண்டே இருப்பது. இதனால் நம் உடலிலும் மனதிலும் பலவித மாற்றங்கள் ஏற்படும். இவை பெரும்பாலும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. பல நேரங்களில் நம் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி நம்மை கற்பனை உலகில் முடக்கி விடும்.

உண்மையில் மிகவும் ஆபத்தானது இந்த பகல் கனவு. இதனால் பெரிய பலன் ஏதும் இல்லை. மற்றபடி இது கால விரயமே. இந்த மாதிரி கற்பனையில் மனதை அலைபாய விடாமல் நிதர்சனத்தை நேரில் சந்தித்து வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்வது அனைவருக்கும் சிறப்பு.


கடவுளே மஹாலிங்கம், எல்லோரும் பகல் கனவு காண்பதை விடுத்து, சிறந்த லட்சியங்களை உருவாக்கி அது நோக்கி பயணம் செய்ய தூக்கத்தில் கூட வழி ஏற்பட அருள் செய்யுங்க..

சதுரகிரியாரே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

Monday, November 21, 2011

விண்ணைத்தாண்டி ஓடும் விலைவாசி...

ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை உயரும் போதும் மற்ற சில பொருட்களின் விலையும் அதிகரித்து வந்திருக்கிறது. 

பெட்ரோல் விலையை நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு தற்காலிகமாக குறைத்தாலும் இவ்வாறுஉயர்ந்த மற்ற எந்த விலைவாசியும் குறையவில்லை. பெட்ரோல் விலை மீண்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் உயர்த்தப்படும் போது மற்ற பொருள்களும் மீண்டும் விலை ஏற்றப்படும். 

இப்போது தமிழகத்தில் பால், பஸ்கட்டணம் உயர்த்தப்பட்டு மின் கட்டணமும் உயர்த்தப்பட இருக்கிறது. 

இதில் ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால் இந்த கட்டணங்கள் மற்ற மாநிலங்களில் இன்னும் அதிகம். முக்கியமாக மின் கட்டணம். 

நான் ஓசூரில் இருக்கும் போது (2009) மின்கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை சுமார் ரூ 300-00 மட்டுமே கட்டி இருக்கிறேன். ஆனால் இங்கு கல்கத்தாவில் (2011) 3 மாதங்களுக்கு ஒருமுறை சுமார் ரூ 1600-00 கட்ட வேண்டி இருக்கிறது. இத்தனைக்கும் நான் ஓசூரில் உபயோகித்த ஹீட்டரை இப்போது இங்கு உபயோகப் படுத்துவதில்லை. இந்த மின் கட்டணம் விரைவில் இங்கு உயர்த்தப்பட உள்ளது.

மேலும் பேருந்து கட்டணங்கள், தமிழகத்தில் ரூ 2-00 குறைந்த பட்ச கட்டணம், ஆனால் இங்கு கல்கத்தாவில் ரூ 4-00 குறைந்த பட்ச கட்டணம். ஆனால் இங்கு இருக்கும் பெரும்பாலான பேருந்துகளில் பயணம் செய்தால் முதுகு வலி நிச்சயம். அவ்வளவு மோசமாக இருக்கும். உண்மையில், இதோடு ஒப்பிடும்போது தமிழகத்துக்கு வரும்போது நான் ஒரு சுகமான பேருந்துப் பயணத்தையே கண்டிருக்கிறேன். இந்த பேருந்துக் கட்டணம் இங்கு பல ஆண்டுகளாக நடைமுறையில் உளளது.  எப்போது வேண்டுமானாலும் உயர்த்தபடலாம்.

பால் விலை இங்கு அரை லிட்டர் ரூ 11-50 (அரசு விலை). ஆனால் தனியார் பால் (அமுல்) அரை லிட்டர் ரூ15-00.

தானிய வகைகளும் காய்கறிகளின் விலையும் மிகவும் அதிகம். எனது மாத பட்ஜெட்டில் எனது வாடகைக்கு இணையாக இவற்றுக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது.

நடுத்தர வர்க்கமான நாமே இவ்வளவு செலவு செய்ய யோசிக்கும்போது தினம் ரூ32 ம் அதற்கும் கீழும் சம்பாதிக்கும் ஏழைகளை நினைக்க இன்னும் வருத்தமாக இருக்கிறது.  இவர்களின் எண்ணிக்கை நம் ஜனத்தொகையில் சுமார் 40% என்று அரசாங்கமே சொல்கிறது.

அரசாங்கம் விலைவாசிகளை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் இது மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் தெரிகிறது. கொள்ளை சம்பவங்களும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணமும் இப்போது அதிகரித்து வருகிறது. மக்கள் வருமானத்திற்கு மீறிய செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே அரசு உடனடியாக இதற்கு ஒரு தீர்வு காண முயல வேண்டும்.

ஆனால் இதை செய்யாமல் இவர்கள் ஏதோ நம்பர் கேம் ஆடிக்கொண்டு இருப்பதைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.

இது பற்றிய எனது முந்தைய ஒரு பதிவு :

விலைவாசி உயர்வும், அதற்கு தீர்வும் (?)


நாட்டு ஜனங்களை அந்த மஹாலிங்கம்தான் ரட்சிக்கணும்.

சதுரகிரி நாதனே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

Thursday, November 17, 2011

என் கனவில் கடவுள்....

அது 1993ம் ஆண்டு, கார்த்திகை மாதம் 1ம் தேதி. 

மிகுந்த மன வருத்தத்துடனும் மன உளைச்சலுடனும் நான்  வாழ்வின் நம்பிக்கையை முழுமையாக் இழந்திருந்த நேரம். 

பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக துரத்த வாழ்வில் கருமேகங்கள் சூழ்ந்திருந்த நேரம்.

எண்ணங்கள் தட தட என தவறாக ஓட ஆரம்பிக்க என்ன செய்வது என்ற நிலை தடுமாறி ஒரு மயக்கத்தில் தூங்காமல் விழித்திருந்த நேரம்.

வாழ்வின் நமக்கு தெரிந்த அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு பெரும் பாரமான உணர்வு மனதில் அழுந்த கண்களில் நீர் பூக்க திக்கு தெரியாமல் திணறிய நேரம்.

சாய்ந்து அழ தோள் கூட இல்லாமல் தனிமையில் மருகி நின்றிருந்த நேரம்.

இரவின் இருட்டு பேயாய் அழுத்த, கண்ணீரில் தலையணை நனைந்து தூக்கம் தொலைந்த நேரம்.

அசதியிலும் ஆற்றாமையிலும் லேசாக கண்ணயர, கனவு விரிகிறது :


ஒரு ரயிலடி. யாரையோ ரயில் ஏற்றிவிட வந்திருக்கிறேன். திடீரென்று எல்லோரும் எங்கோ ஓடுகிறார்கள். தோள்களில் பைகளுடன் நானும் அவர்களுடன் ஓடுகிறேன். 

ஒரு சிறு மண்டபம் போன்ற ஒரு கட்டிடத்துக்குள் ஈ நுழைய முடியாத அளவு கூட்டம். உள்ளே ஒன்றும் தெரியவில்லை. நான் வெளியில். ஓ!! ஏதோ கோயில் போல இருக்கிறது. அதுதான் கூட்டமாக இருக்கிறதே என ஒரு அசட்டையுடன் திரும்ப எத்தனிக்கையில், 

கோவில் மணி ஒலி கணீரென்று ஒலிக்க ஆரம்பிக்கிறது. திரும்பிப்பார்க்கிறேன். முன்னால் நின்றிருந்த அனைவரும் ஒருசேர விழுந்து வணங்குகிறார்கள். பின்னால் நிற்கும் எனக்கு அந்த ஆண்டவனின் தரிசனம்.

கண்கள் பனிக்க, கைகள் துவள, பைகள் விடுபட, கண்ணீரோடு வணங்குகிறேன். கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வழிய அவன் சந்நிதானத்தில் நிற்கிறேன்.


திடீரென்று கனவில் இருந்து விழித்து எழுகிறேன். வியர்த்திருக்கிறது. கண்ணீரால் கன்னம் நனைந்திருக்கிறது. விடிகாலை 4 மணி. 

அதன் பிறகு தூக்கம் வரவில்லை. இந்த கனவின் நினைவோடு புரண்டு புரண்டு படுக்கிறேன். ஒரே சிந்தனை. இதற்கு என்ன அர்த்தம். அல்லது அனர்த்தமா? கடவுளைப்பற்றி நேற்று ஒரு விநாடி கூட நினைக்க வில்லையே. பிறகு எப்படி இப்படி ஒரு கனவு வரும். ஆழ்ந்த யோசனை..

சில மாதங்களுக்கு முன் கடவுளிடம் விட்ட சவால் ஞாபகம் வந்தது. 

”நீ வந்து என்னைப்பார்க்காமல் உன்னை வந்து நான் ஏன் பார்க்கவேண்டும்??”

ஓ இதனால்தான் கடவுள் என்னை பார்க்க வந்தாரா?? யாருமே எனக்கு இல்லை என்ற எண்ணத்தைப் போக்க வந்தாரோ?? ஒன்றும் புரியவில்லை.

ஆனால் மனதில் ஒரு புதிய நம்பிக்கை கீற்று ஒளிவீச ஆரம்பித்திருந்தது. ஏதோ ஒரு இனம் புரியாத மாற்றம் ஆழ் மனதில். ஏதோ நல்லது நடக்கும் என்ற ஒரு அசட்டுத்தனமான நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. 

“கடவுள் நிச்சயம் நமக்கு துணை இருப்பார்”

அந்த நம்பிக்கையோடு முதல் முறையாக கடவுளைக் காண்பதற்காக கோயிலை நோக்கி பயணப்பட்டேன்...


- இது என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். மீண்டும் இன்று கார்த்திகை 1ம் தேதி.

எனக்கு அடைக்கலம் கொடுத்த மஹாலிங்கத்துக்கு வணக்கம். உலகமக்கள் அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்து காப்பாற வேண்டுகிறேன்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்..

Tuesday, November 15, 2011

லஞ்சத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாமா?

இன்றைய சூழலில் லஞ்சம் என்பது பரவலாக காணப்படுகிறது. பிறப்பு  / இறப்பு சான்றிதழ் வாங்க, ரேஷன் அட்டை வாங்க / மாற்ற, சாதி சான்றிதழ் வாங்க, சில அரசு அனுமதிகள் வாங்க, மற்றும் பல சந்தர்ப்பங்களில் லஞ்சம் என்பது நீக்கமற நிறைந்துவிட்டது.  சில இடங்களில் நேரடியாகவும், சில இடங்களில் இடைத்தரகர்கள் மூலமும் இது வாங்கப்படுகிறது. 

லஞ்சமே கொடுக்காமல் ஒரு மனிதன் நம் தேசத்தில் வாழ முடிந்தால் உண்மையில் அவர் ஒரு மிகப்பெரிய லட்சியவாதிதான். ஆனால் இதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை நினைத்து என்னைப் போன்ற பலருக்கு பயமாக இருக்கிறது.

லஞ்சம் எப்போதெல்லாம் கொடுக்கப்படுகிறது ?

1) தங்களுக்கு நேர்மையாக ஆகவேண்டிய காரியம் தாமதமில்லாமல் குறித்த நேரத்தில் ஆவதற்கு

2) அதே காரியம் குறித்த நேரத்துக்கு முன்பாகவே சற்று விரைவாக ஆவதற்கு

3) சட்ட விரோதமாக சில காரியங்கள் செய்வதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு.

4) சில அதிகாரிகளின் பேராசையால அலைக்களிக்கப்படாமல் இருப்பதற்கு அல்லது அலைக்களிக்கப்பட்டு லஞ்சம் தர தூண்டுவது 

இவற்றில் 2 வது காரணத்துக்கு லஞ்சம் கொடுப்பதை பெரும்பாலான நிறுவனங்கள் / தனி மனிதர்கள் விரும்புகின்றனர்.  இவ்வாறு காரியம் ஆகிவிடாதா என்ற நப்பாசையில் லஞ்சம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர்.

நான் பார்த்தவரை, 4 வது காரணம்தான் லஞ்சம் வாங்கும் உத்தியாக பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது. காரியம் ஆவதற்காக பலரை ”இன்றுபோய் நாளை வா” பாணியில் அலைக்களிப்பது சர்வ சாதாரணமாக நமது அரசு அலுவலங்களில் நடைபெறுகிறது. மேலும் பொறுப்பாக பதில் சொல்லும் அதிகாரிகளும் மிகக் குறைவே.

இந்த நிலையில் போராட மனமும் நேரமும் இல்லாத பலர் லஞ்சம் கொடுத்துதான் இன்றும் காரியம் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் (கொண்டிருக்கிறோம்). 

இவ்வாறு லஞ்சம் கொடுப்பதும் குற்றமே எனினும் கொடுக்காமல் கஷ்டப்படுவதைவிட கொடுத்து சற்று நிம்மதியாக இருக்கலாமே என்ற எண்ணம்தான் காரணம்.

இந்த சூழ்நிலையில் நேற்றைய செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி - இந்த லஞ்சத்தை சட்டப்பூர்வமாக ஆக்கிவிடவேண்டும் என்ற வேண்டுகொள் நம் தனியார் நிறுவன முதலாளிகளிடம் இருந்து வந்திருக்கிறது. ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்கபோல இருக்கு. அதன் சுட்டி கீழே :

'Payment of Rs 5-10k speed money can be legitimised'



பொதுஜனமாகிய நாம் கரடியாக கத்தினாலும் கண்டுகொள்ளாத நம் அரசு இவர்கள் சொன்னால் கொஞ்சம் கேட்பார்கள். 

ஆனால் இந்த விசயத்தில்  லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்கினால் இதற்கு மேலும் யார் லஞ்சம் தருவார்கள் என்றுதான்  பெரும்பாலான அதிகாரிகள் அலைவார்கள். எனவே நம் அரசாங்கம் இந்த கோரிக்கையை நிராகரிக்கத்தான் செய்ய வேண்டும்.

ஆனால் நம் நாடு ஜனநாயக நாடு . என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கும். என்ன நடந்தாலும் நாம்தான் சகித்துக்கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சங்குதான். போன பதிவு அந்த சங்கொலியின் ஒரு எதிரொலிதான். எல்லாம் விதி..


கடவுளே மஹாலிங்கம், இந்த லஞ்சம் இல்லாமல் இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஏதாவது செஞ்சு அதை ஒழிச்சுக் கட்ட உங்களாலதான் முடியும். தயவு செய்து மனசு வையுங்க.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Thursday, November 10, 2011

கூடங்குளமும் -அரசாங்கத்தின் செய்தியும்....(கற்பனை)

இன்றைய நாட்டு நடப்புகளைப் பார்க்கும்போது, முக்கியமாக கூடங்குளம் அணு உலை சம்பந்தமான செய்திகளைப்படிக்கும் போது எனக்கு கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி எழுதிய ”அரசாங்கதிடம் இருந்து பொதுமக்களுக்கு ஒரு செய்தி” என்ற பதிவு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என தெரிகிறது.. அதை மீண்டும் மீள் பதிவு செய்கிறேன்.

”அரசாங்கதிடம் இருந்து பொதுமக்களுக்கு ஒரு செய்தி” (கற்பனை)


என் அன்பான குடி மக்களே, இந்த ஜனநாயகம் என்பது வோட்டுப் போட்ட வுடன் உங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாது. ஒரு ஓட்டு போட்டவுடன் உங்கள் ஜனநாயக கடமை முற்றிலும் முடிந்து விட்டது. அதன் பிறகு உங்களுக்கு அரசாங்கமாகிய எங்களை கேள்விகேட்க எந்த அதிகாரமும் இல்லை.

எங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதுவே சரி. அது உங்களை குழி தோண்டிப் புதைப்பதாக இருந்தால்கூட அதை நீங்கள் கேள்வி கேட்க உரிமை அற்றவர்கள். நாங்கள் விஷத்தை அமிர்தம் என்று கூறிக் கொடுத்தால்கூட அதை கேள்வி கேட்காமல் நீங்கள் குடிக்கத்தான் வேண்டும். அது இந்த தேசத்தின் குடிமகனாகிய உங்கள் ஜனநாயக கடமை. இதை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், நீங்கள் தீவிரவாதிகள், ஜனநாயக விரோதிகள், நக்சலைட்டுகள.

உங்களுக்காக அரசாங்கத்தின் ஜெயில்கள் காத்திருக்கின்றன. உங்கள் பொருளாதார ஆதாரங்கள் நசுக்கப்படும். நீங்கள் ஊழல்வாதிகளாக விளம்பரப்படுத்தப் படுவீர்கள். உங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும். உங்கள் அனைத்து வங்கிக் கணக்குகளும், பாஸ்போர்ட்டும் முடக்கப்படும்.  திடீரென்று நீங்கள் வெளிநாட்டுக்காரராகவும் ஆக்கப்படலாம். நீங்கள் எங்கள் வீட்டு வாசலில் வந்து எங்களை விட்டு விடுங்கள் என்று பிச்சை எடுக்கவேண்டும். அது வரை நீங்கள் துரத்தப்படுவீர்கள்.

இதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டும் போராட்டங்கள் நடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களும் நாங்கள் கொடுக்கும் அனைத்து கட்டுப் பாடுகளும் நிறைந்த 100 பக்க பாண்டு பேப்பரில் கையொப்பமிட வேண்டும். அதை கடைபிடிக்கவும் வேண்டும்.

சட்டம் என்ன சொல்லி இருந்தாலும் நாங்கள் சரி என்று நினைப்பதை மட்டுமே செய்வோம். மேலதிக விவரங்களுக்கு நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம். அதன் தீர்ப்பு சில பத்தாண்டுகளில் அல்லது நூற்றாண்டுகளுக்குள் வழங்க ஆவன செய்யப்படும். அதுவரை நீங்கள் எது செய்தாலும் கைது செய்து மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் பின்னும் போராட்டம் நடத்த முன்வரும் தைரிய சாலிகளுக்கு ஒரு முன் எச்சரிக்கை. பின் விளைவுகளுக்கு அரசாங்கம் பொறுப்பாகாது. அதை முன் கூட்டியே எச்சரிக்கவே இந்த செய்தி...



கடவுளே மஹாலிங்கம். நாட்டு மக்களைப் பற்றியும் சிந்திக்கிற ஒரு அரசாங்கம் அமைய அருள் செய்யுங்க.

சதுரகிரி நாதனே போற்றி!! சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா !!!!

Wednesday, November 9, 2011

நல்லவன், கெட்டவன்... ஒருவரே !!!!!! ????

சில நாட்களுக்கு முன் என் மகன் சுட்டி டிவியில் ஜாக்கிசான் கார்டூன் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் ஒரு (புலி) மந்திரக்கல்லின் உதவியால் ஜாக்கி இரண்டு நபராக ஆவதாக காண்பித்தார்கள். ஒருவன் ரொம்ப நல்லவன். இன்னொருவன் ரொம்ப கெட்டவன். அதில், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இவ்வாறு இரண்டு நபர்கள் இருப்பதாக ஒரு விளக்கமும் கொடுத்தார் அங்கிள்.

இது குறித்து ஆழ்ந்து சிந்தித்த பொழுது , ஒரு மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தை எவ்வளவு எளிமையாக கூறி இருக்கிறார்கள் என்பது புரிந்தது.

நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வின் சில இக்கட்டான சூழல்களில் இந்த மாதிரி நமக்கு உள்ளே இருக்கும் இந்த இரண்டு நபர்களை (நல்லவன், கெட்டவன்) ஸ்பஷ்டமாக சந்திக்க முடியும். நாம் எடுக்கும் சில முடிவுகளால் ஏற்படும் சாதக பாதகங்களை அலசும் போது இது நமக்கு புலப்படும். 

அல்லது நம் சிந்தனை தவறாகப் போகிறதே என்று எப்போதாவது நமக்கு புலப்படும்போது இந்த கெட்டவன் தான் அங்கே வேலை செய்திருக்கிறான்.

இந்த கெட்டவன் நமக்குள்ளேயே இருக்கும் வரை பிரச்சினை இல்லை. ஆனால் அவனுடைய சிந்தனைகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர நாம் எத்தனிக்கும்போதுதான் நாம் யாரென்ற உண்மையான பிம்பம் வெளிப்படும்.

விஷத்தை பாட்டிலிலேயே வைத்திருக்கும்வரை அது சாதுதான். ஆனால் எடுத்து சாப்பிட்டுவிட்டால் ??? யோசித்துப் பாருங்கள்.

இந்த இருவரில் நம் வாழ்நாளில் அதிகம் யாரை நாம் வெளி செலுத்துகிறோமோ அவராகவே நாம் அறியப்படுகிறோம்.  இந்த ”யாரை வெளிப் படுத்துவது?” என்ற உரிமை இயற்கையால் / கடவுளால் நமக்கு வழங்கப்பட்டு இருக்கிறது (Free-Will). அதை நாம் சரியாக உபயோகப்படுத்துவது ”நமது கை”யில்தான் இருக்கிறது.

இந்த ”நமது கை” என்பது நம் அகங்காரத்தையும் நம் வாழ்வியல் சூழலையும் சார்ந்து இருக்கிறது.  இந்த இரண்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.. ஏனெனில் நம் வாழ்வியல் சூழல்கள் நம் அகங்காரத்தை தீமானிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

நம்  அகங்காரத்தை தீர்மானிப்பதில் இன்னொரு முக்கிய பங்கு நம் ஜீன்களில் இருக்கிறது. இதைத்தான் முன் ஜென்ம வினை / கர்மா எனவும் சொல்கிறார்கள்.

அதாவது, கருப்பு வெள்ளை பிலிம் உபயோகப் படுத்தி எடுத்த புகைப்படம் கருப்பு வெள்ளையில்தான் வரும். கலர்பிலிம் உபயோகப்படுத்தினால் கலர்படம் எடுக்கலாம். அதுபோல X-Ray பிலிம் உபயோகப்படுத்தி படம் எடுத்தால் அதில் நம் எலும்புகள்தான் தெரியும். பிலிம் என்ற ஒரே மீடியத்தில் இத்தனை ரகங்கள் இருக்கும்போது மனிதர்களில் எத்தனை ரகமோ??


”உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல்”

எனக்கு மிகவும் பிடித்த இந்த குறள் ஒரு மனிதனின் ஆத்ம சுத்தியின் ஆழத்தைப் பற்றிப் பேசுகிறது. இதன்படி வாழ்வதே ஒரு லட்சிய வாழ்க்கை. 

யோசித்துப் பாருங்கள். நமக்குள் இருக்கும் அந்த கெட்டவனை நாம் அழித்துவிட்டால்??? அப்போதுதான் இந்த நிலை சித்திக்கும்.

ஒவ்வொரு மனிதனும் நமக்குள் இருக்கும் கெட்டவனை அழிக்கமுடியுமா தெரியவில்லை . ஆனால் இப்படி ஒருவன் நமக்குள் இருக்கிறான் அவனை நாம் ஜாக்கிரதையாக கையாளவேண்டும் என்ற விழிப்புணர்வுடன் நாம் செயல்படத் தொடங்கினால் வாழ்வு இனிக்கும்.



கடவுளே மஹாலிங்கம், இந்த உலகில் இருக்கும் எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கும் அந்த கெட்டவனை நீங்கதான் அழிக்கணும்..

சதுரகிரி சுந்தரனே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

Monday, October 31, 2011

உலக மக்கள்தொகை - 700 கோடி

இன்று 31-10-2011 உலகின் மக்கள்தொகை 700 கோடி ஆக ஆனது. செய்தி சுட்டி கீழே :

World's seven billionth baby born in UP?


இதில் இந்தியா மற்றும் சீனா வில் மட்டுமே உலகின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வாழ்கிறார்கள். அதுவும் இந்த இரண்டு நாடுகளில் மக்கள்தொகை அடர்த்தியில் நமது இந்தியாதான் முன்னணியில் இருக்கிறது. அதாவது சீனாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 140 மக்கள் வாழ்கிறார்கள், அதுவே இந்தியாவில் 368 பேர் வாழ்கிறார்கள். 

அதிக மக்கள் தொகையும் மக்கள் அடர்த்தியும் இருக்கும் நம் இந்தியாவின் சவால்கள் மிக அதிகம்.


1) அனைவருக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் - உணவு, உடை, இருப்பிடம்..

2) அனைவருக்கும் சிறந்த கல்வி, மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல்

3) நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்தல்

4) சிறந்த நேர்மையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல்

இவற்றை நாம் ஓரளவுக்கு செய்து வந்தாலும், இன்னும் விரைவான வேகத்தில் இவற்றை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

இதற்கு தடையாக இருக்கும் காரணிகளை அகற்றி விரைவில் நாம் நம் தேவைகளில் தன்னிறைவு அடைய இந்த முக்கியமான தருணத்தில் வேண்டிக்கொள்வோம்..

சதுரகிரியாரே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Monday, October 17, 2011

மின்சாரம் - சில கவலைகள்...

இன்று 17 அக்டோபர் 2011 முதல் 3 நாட்களுக்கு கோல் இந்தியாவில் ஊழியர்களால் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நிலக்கரி இல்லாமல் திணறிக் கொண்டிருக்கும் நம் தேசத்தில் இது ஒரு பெரிய அடியாகவே இருக்கும்...

ஏற்கனவே மின்சார தட்டுப்பாட்டால் திண்டாடும் நாம் இன்னும் சில மணிநேர மின் வெட்டிற்கு நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

நம் அரசாங்கம் நினைப்பதுபோல் ஆயிரம் கோடிக்கணக்கில் முதலீடு செய்தால்தான் மின்சாரம் நமக்கு கிடைக்குமா? என இன்று கூகிளில் தேடிக் கொண்டிருந்தபோது சில ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன..

பீகார் மாநிலத்தில் ஒரு தனியார் கம்பெனி நெல் உமியில் இருந்து மின்சாரம் தயாரித்து கிராமங்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறதாம். ஒரு நாளைக்கு ரூ 2 செலவில் வழங்குவதாக தெரிகிறது. அந்த கம்பெனியின் வலைத்தள இணைப்புக்கு இங்கே அழுத்தவும்.  அதில் மேலும் பல விவரங்கள் கிடைக்கிறது.

இதுபோல ஒரு சில நிறுவனங்கள் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பம் வைத்திருக்கிறார்கள். 

மேலும் நான் எனது பள்ளி நாட்களில் கேள்விப்பட்ட கோபார் கேஸ் எனப்படும் சாண எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்க தொழில் நுட்பம் ஏற்கனவே இங்கு இருக்கிறது. அதை ஏன் தீவிரமாக முன்னெடுத்து செல்லக்கூடாது??

சிறிய சூரிய சக்தி மின் நிலையங்களை ஒவ்வொரு பெரிய கட்டிடங்களிலும் அமைக்க முடியும் என சில நிறுவனங்கள் சொல்கின்றன.. அரசாங்கமும் அதற்கு மானியம் வழங்குகிறது.

இது போல நிறுவனங்களை அணுகி அவற்றின் மூலம் நம் மின் உற்பத்திகளை பெருக்கினால் நம் மின் பற்றாக்குறைகள் தீராதா??

மேலும் நம் நாட்டில் இருக்கும் பெரிய கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் புதிய மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து இதை மேலும் எளிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

இந்த கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தம் வளாகங்களில் இப்படிப்பட்ட புதிய தொழில் நுட்பத்துடன் சிறு மின் தயாரிப்பு நிலையங்களை அமைத்தால் அவைகளுக்கான மின் பயன்பாடு மிச்சம் தானே..

உண்மையில் மனமிருந்தால் மார்க்கமுண்டு. ஊர் கூடி தேர் இழுத்தால் நிச்சயம் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது. அதற்கு அரசாங்கமும் மனசு வைத்து ஆவன செய்தால் விரைவில் தீர்வு வரும் என நம்புகிறேன்.. செய்வார்களா???

அந்த மஹாலிங்கம்தான் அருள் செய்யணும்...

சதுரகிரி நாயகனே போற்றி... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Friday, October 14, 2011

நாடு முழுதும் மின்சார பற்றாக்குறை...

கடந்த சில நாட்களாக இங்கு கல்கத்தாவில் ஒரு நாளைக்கு 6 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை மின்சாரம் இருப்பதில்லை.. ஆனால் தொடர்ந்து நிறுத்தாமல் 2 மணி நேரம் வரை 3 அல்லது 4 முறை ஒவ்வொரு நாளும் நிறுத்துகிறார்கள். வீட்டில் யூபிஎஸ் இருப்பதால் ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது...

இந்த நிலை நாடுமுழுதும் பரவலாகவே இருப்பதாக தெரிகிறது. இது பற்றி கடந்த சில நாட்களாக செய்திகளிலும் அடிபட்ட வண்ணம் இருக்கிறது. நம் நாட்டில் இருக்கும் பல அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு மிகக் குறைவாக இருப்பதாகவும் அதற்கு கீழ்க்கண்ட காரணங்களை பட்டியலிட்டும் இருக்கிறார்கள் :

1) நிலக்கரி வரத்து மிகவும் குறைந்துவிட்டது. சில அனல் மின் நிலையங்களில் 2-3 நாட்களுக்குதான் இருப்பு இருக்கிறதாம். எப்போதும் 2-3 வாரங்களுக்கான நிலக்கரி இருப்பில் இருக்க வேண்டும்.

2) தெலுங்கானா பிரச்சினையால் ஏற்பட்டுள்ள வேலை நிறுத்தத்தால் உண்டான உற்பத்தி குறைபாடு.

3) நிலக்கரி எடுக்கும் இடங்களில் பரவலாக பெய்த மழை. இது நிலக்கரி எடுப்பதையும் அதை கொண்டுசெல்வதையும் அதிகமாக பாதித்துள்ளதாக தெரிகிறது.

4) புதிய நிலக்கரி சுரங்களுக்கு அனுமதி கொடுப்பதில் ஏற்படும் காலதாமதத்தினாலும் அதன் சம்பந்தமான புதிய சட்டங்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கவில்லை. இதனால் நிலக்கரி உற்பத்தி அளவு 2009 இருந்த அளவிலேயே இன்னும் இருக்கிறது.

5) யூனியன் பிரச்சினைகளால் உற்பத்தி அதிகரிக்க முடியாமல் போனதாம்.

6) பல மாநில மின்சார வாரியங்கள் நிலக்கரி வாங்கியதற்கு பலகோடி பாக்கி வைத்துள்ளார்களாம். இங்கு மேற்கு  வங்கத்தில் இது கிட்டத்தட்ட ரூ300 கோடி அளவில் பாக்கி இருப்பதாக சொல்கிறார்கள். இதற்கு தீர்வாக மின் கட்டணத்தை அதிகரிப்பதாக பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ 4-25 க்கு தருகிறார்கள். இதை ரூ 6 ஆக ஏற்ற பரிசீலனையில் இருப்பதாக கேள்வி.


இப்போதைக்கு நிலைமையை சரிக்கட்ட கீழ்க்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன :

1) முதலில் தேவையான அளவு நிலக்கரியை உடனடியாக அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது புதிய ஊழல்களுக்கு வழிவகுக்கும் என எனக்குப் படுகிறது. முடிந்த அளவுக்கு ஊழல் இல்லாமல் இந்த இறக்குமதி நடந்தால் சந்தோசப்படுவேன்.

2) இன்றைய செய்தியில் நம் நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் சுரங்கங்களை எடுத்துக்கொள்ள இருக்கும் புதிய வழிமுறைகள்பற்றி அரசாங்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

3) நம் நாட்டிலேயே இருக்கும் சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை உடனடியாக அனல் மின்நிலையங்களுக்கு எடுத்துச்செல்ல ஆவன செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதான் உடனடியாக நம்மவர்கள் செய்ய வேண்டியது. இதை செய்தால்தான் மின் உற்பத்தி தங்குதடை இன்றி நடைபெற வழி செய்ய முடியும்.

4) கோல் இந்தியா லிமிடெட் என்ற நமது இந்திய நிலக்கரி கழகம் ஒவ்வொரு ஆண்டும் தனது உற்பத்தியில் 10% அளவிற்கு வெளிச்சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்தி அதையும் நமது அனல் மின் நிலையங்களுக்கே கொடுக்க (விற்க) உத்தரவிடப்பட்டுள்ளது. விலையில் இருக்கும் வித்தியாசத்தினால் இந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ4000 கோடி அளவுக்கு இந்த ஆண்டு இதனால் இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்படுகிறது.


எனக்கு என்னவோ இது அரசாங்கம் அனல் புனல் நிலையங்களை முடக்கி அணு மின் நிலையங்களை முன்னிறுத்துவதற்காக வேண்டுமென்றே இந்த பற்றாக்குறையை ஏற்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது. 

மேலும் மின் கட்டணங்களை வகைதொகை இல்லாமல் உயர்த்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வார்களோ என்ற பயமும் இருக்கிறது.

ஏற்கனவே விண்ணில் பறக்கும் விலைவாசியால் நசுங்கிப்போய் இருக்கும் சாமானியனுக்கு நம் அரசாங்கம் மேலும் சில விலையேற்றங்களையும் சில அணு மின் நிலையங்களையும் இந்த மின் பற்றாக்குறையை சாக்கு வைத்து பரிசாக அளிக்கப் போவது மட்டும் உறுதி.

அந்த மஹாலிங்கம்தான் நம்மளைக் காப்பாத்தணும்...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....

Wednesday, October 12, 2011

இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ள கருப்பு பணம்....$40 பில்லியன்

இன்றைக்கு கீழ்க்கண்ட செய்தியை படிக்க நேர்ந்தது....

Scam 2.0: $40 bn of black money may have come back to India


அதாவது நம் நாட்டின் கருப்புபணம் நம் நாட்டிற்கு வந்ததாக ஒரு கணக்கு சொல்லி இருக்கிறார்கள்... அதன்படி, சென்ற ஒரு ஆண்டில் மட்டும் நம் நாட்டிற்குள் வந்த கருப்பு பணத்தின் மதிப்பு மட்டும் சுமார் $40 பில்லியன். 

இது தோராயமாக நம் நாட்டின் சென்ற ஆண்டின் 2010-11 ஏற்றுமதி கணக்குகளை மட்டும் படித்து சொல்லி இருக்கும் தொகைதான் இது. அதாவது பொருள் மற்றும் சர்வீசஸ் ஏற்றுமதிக்கும் நம் நாட்டுக்குள் வந்த பணத்தின் மதிப்புக்கும் இருக்கும் வித்தியாசம் தான் இது.

அதாவது மேல் நாடுகளில் இப்போது ஓரளவுக்கு கெடுபிடிகள் அதிகமாக ஆகிக்கொண்டு வருவதாலும், அந்த அளவுக்கு நம் நாட்டில் கெடுபிடிகள் அதிகம் இல்லாமல் இருப்பதும் மற்றும் சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளை வைத்து இங்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இருப்பதாலும் கருப்பு பணத்தை இந்தியாவில் வைத்திருப்பதுதான் பாதுகாப்பு என கருதுகிறார்கள் போல இருக்கிறது.

இது நம் அரசாங்கத்தின் கண்களுக்கு இன்னும் தட்டுப்பட வில்லை போல இருக்கிறது.சாமானியர்கள் லேசாக செலவு செய்தாலே ஆயிரம் கேள்விகள் கேட்கும் அரசாங்கம், கோடிக்கணக்கான பணத்தை இப்படி எடுத்து வந்ததை கேள்வி கேட்காமல் கமுக்கமாக இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

எப்போதுமே நம் நாட்டில் பலியாடு என்பது சாமானிய நடுத்தர மக்கள்தான். வசதி படைத்தவர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் எதுவும் செய்யலாம் என்ற நிலை மாறும் வரை நம் நாடு உருப்பட வாய்ப்பு  நிச்சயம் இல்லை.

இதை யெல்லாம் அந்த மஹாலிங்கம் பார்த்துக்கிட்டுதான் இருக்கிறார். ஆனால் இன்னும் ஒண்ணும் செய்யல. எங்கெங்கோ சுழட்டி அடிக்கும் அவர் சாட்டை இதிலும் சுழலும் நாள் வெகு தூரம் இல்லை.


சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா... ஹர ஹர மஹாதேவா சரணம்...

Friday, September 30, 2011

ஆன்மீகம் - யாருக்கு ???

ஆன்மீகம் - பக்தி, கோவில், குளம், யோகா,  தியானம்,  இதெல்லாம் வயசானவங்களுக்குதான் என்று ஒரு தவறான கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால் உண்மையில் யோசித்தால் ஒரு மனிதன் முழுமையாக வாழும் இளமை, நடுத்தர வயது காலத்தில் அவன் பண்பட்டு முழுமையாக இருத்தல் அவசியம். அப்படி மனிதனை முழுமையாக்குவது ஆன்மீகமே. எனவே இது எல்லா வயதினருக்கும் தேவை.
 
ஆன்மீகம் என்பது பாலினம், உயிரினம் கடந்த ஒரு புனிதத் தொடர்பு. இதை கடைபிடிக்க எதுவுமே தடையில்லை. யாரும் எப்போதும் எந்த சூழலிலும் கடைபிடிக்கும் சுதந்திரம் உள்ளது.
”ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்” என்று கூறுவார்கள். அதுபோல ஆன்மீகம் இல்லா மனிதனும் அரை மனிதன்தான்.(நாத்திகமும் ஒரு ஆன்மீகமே.. முழுமையாக கடைபிடிக்கும் பட்சத்தில்).

மனித மனங்களை பக்குவப்படுத்தி அவனை முழுமையாக  வாழ தயார் படுத்தும் ஒரு விஞ்ஞானம் தான் ஆன்மீகம் என்கின்ற மெய்ஞானம். ஒரு மனிதனின் அடிப்படை பண்புகளை செம்மைப்படுத்துகின்ற ஒரு துடைப்பம் தான் நம் ஆன்மீகம்.

நம்மை பாதிக்கும் புறக்காரணிகளை இனம் காணவும் அவற்றை சமாளிக்கும் வலிமை தரவும் வல்லது ஆன்மீகம். உறவுகளை வளர்ப்பதற்கும், செம்மைப்படுத்துவதற்கும் அவசியம் ஆன்மீகம்.

ஆன்மீக நட்புகள் என்றுமே நிலையானவை. அது ஆத்மாவில் நிலை கொள்ளும். நம் வாழ்நாள் முழுதும் நமக்கு வெளிச்சம் தரும்.

ஆன்மீகம் - தீமை என்னும் இருட்டை அகற்றும் விளக்கு... பகைமை என்னும் குப்பையை எரிக்கும் நெருப்பு..

இப்படிப்பட்ட ஆன்மீகத்தை அனைவரும் கைகொள்வோம் சுபிட்சமாக வாழ்வோம்..


கடவுளே மஹாலிங்கம்... ஆன்மீகம் தளைத்து மக்கள் செம்மையாகி நாடு சுபிட்சமாக அருள் செய்யுங்க...

சதுரகிரி நாதனே போற்றி... சுந்தர மஹாலிங்கத்த்க்கு அரோஹரா.. ஹரஹர மஹாதேவா சரணம்.. சரணம்...


Thursday, September 29, 2011

எளியோருக்கும் நீதி...

இன்று 29 செப்டம்பர் 2011 ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள். இன்றுதான் வாச்சாத்தி கொடுமை குறித்த வழக்கில் 19 வருடங்கள் கழித்து நமது மாவட்ட நீதி மன்றம் ஒரு தீர்ப்பு கொடுத்திருக்கிறது. அதன் சுட்டி கீழே..

1992 Vachati mass rape case: 215 forest personnel held guilty, nine for rape


ஒரு வழியாக 1992ல் செய்த அநீதிக்கு 2011லாவது தீர்ப்பு வந்ததே.

இருந்தாலும் இதில் சில விசயங்கள் நெருடவே செய்கிறது.. மிக முக்கியமாக ஏழை எளிய மக்கள் குறித்து அரசு அதிகாரிகள் கொண்டிருக்கும் அலட்சியமும் அவர்களை எதுவும் செய்யலாம் யாரும் அதை கேள்வி கேட்க முடியாது என்ற ஆணவமும்.

இது காலம் காலமாக ஏழை எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றாலும் ஒரு நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு சட்டப்படி இதில் இவ்வளவு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன்.

இவ்வளவு ஆண்டுகள் சளைக்கால் போராடிய அமைப்புகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள். 

இதிலிருந்து அரசாங்கம் சில பாடங்கள் படித்து எளிய மக்களை மதிக்க பழகுமா?? அல்லது மீண்டும் இதுபோல சில நிகழ்வுகள் நீதி மன்றங்களால் குட்டப்பட வேண்டுமா??? அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்...

காலம் தாழ்த்தியாவது கிடைத்த இந்த நீதிக்காக கடவுளுக்கு நன்றி... இனியாவது அரசாங்கத்துக்கு நல்ல புத்தி குடுக்கணும்னு வேண்டிக்கிறேன்..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா... ஓம் நம சிவாய...

புலனடக்கம் - எது???

உண்மையான புலனடக்கம் என்பது என்ன?? புலன்களை அடக்கினால்தான் ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடியுமா?? 


உண்மையான புலனடக்கம் என்பது என்ன???

புலனடக்கம் என்பது ஐம்புலன்களாலான சுகங்களை அளவுடனோ அல்லது தேவைக்கேற்றவாறோ  நேர்மையான, தர்மமான வழியில் பயன்படுத்துவதே ஆகும்.

காந்தியடிகள் சொன்ன மூன்று குரங்கு தத்துவம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இது புலனடக்கத்துக்கு மிக முக்கிய வழிகாட்டி. கெட்டதைப் பார்க்காதே.. கெட்டதை கேட்காதே... கெட்டதை பேசாதே...இது ஒரு அடிப்படை வாழ்க்கைத் தத்துவம்.

ஆன்மீகத்தில் இதன் வெளிப்பாடு இன்னும் விரிவானது. நம் பார்வை என்பது அக்கினி தத்துவத்தின் வெளிப்பாடு. கேட்டல் என்பது ஆகாச தத்துவத்தின் வெளிப்பாடு. பேச்சு நீர்த்தத்துவத்தின் வெளிப்பாடு. எனவே நாம் பார்க்கும் / கேட்கும் / பேசும் ஒவ்வொரு விசயமும் நமது கர்ம வினைகளுக்கு ஒப்ப நம்முள் ஒரு சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தும். 

மேலும் ”நுகர்ச்சி”-நாசி (வாயு தத்துவம்) நமது மற்ற புலன்களை தன்னிச்சையாக தூண்ட வல்லதாக இருப்பதால் அதுவும் மிக முக்கிய இடம் வகிக்கிறது. நம் உடல் ரீதியான செயல்பாடுகளும், பாலியல் வெளிப்பாடுகளும் (பூமி தத்துவம்) ஆன்மீக புலனடக்கத்தின் அதி முக்கிய பங்கு வகிக்கின்றன.

தனி மனித ஒழுக்கத்துக்கான ஒரு முக்கிய வழிகாட்டியாகவும் இந்த புலனடக்கம் இருக்கிறது. தனிமனித ஒழுக்கம் என்பது இதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு மனிதனும்  இதை கடைபிடித்தால் நிச்சயம் சமூகம் முன்னேறும்..


புலன்களை அடக்கினால்தான் ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடியுமா??

நிச்சயமாக.. புலன்களை அடக்காமல் அவைகளின் இஷ்டத்துக்கு வாழும்பொழுது நமக்கு ஒரு தற்காலிகமான சந்தோசமே கிடைக்கிறது.. மேலும் அது நம் ஆணவத்தை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தத் தூண்டுகிறது.  நிரந்தர சந்தோசமே நிம்மதிக்கு அடிப்படை.  

தற்காலிகமாக நமக்கு சந்தோசம் தரும் விசயங்களில் பலவும் நம்மை சுற்றி இருப்பவர்களும் நம் உடம்புக்கும் பாதிப்பு ஏற்படுத்த வல்லதாகவே இருக்கிறது.. எனவே புலனடக்கம் என்பது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும் ஒன்றாக இருப்பதால் நிம்மதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் நிச்சயம் கிடைக்கும்.


கடவுளே மஹாலிங்கம், நீங்கதான் எல்லோருக்கும் புலனடக்கம் கைவரப் பெற்று நிம்மதியான வாழ்வு அமைய அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தரனே சரணம.... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....

Wednesday, September 28, 2011

புலனடக்கம்...

பல ஆன்மீக சாதனைகளுக்கு புலனடக்கம் முக்கியமானதாக பேசப்படுகிறது... அது ஏன்?

நமது கர்மாக்கள் நம் புலன்கள் மூலமே வெளிப்படுகின்றன அல்லது நிறைவேற்றப்படுகின்றன. கர்மாக்களை வெளியேற்ற / புதிதாக சேர்க்க இந்த ஐம்புலன்களும் ஒரு வாசலாக செயல்படுகின்றன..

ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் சொல்லி இருக்கிறார்... இந்த ஆசைகள் நம் மனதில் இருந்தாலும் அதைத் தூண்டுவதற்கு புறக் காரணிகள் தேவை இருக்கிறது.. அந்த தூண்டுதல் இந்த ஐம்புலன்கள் மூலமாகவே ஏற்படுகின்றன.

இவ்வாறு தூண்டப்படும் ஆசைகள் நியாயமான முறையில் / அளவாக இருக்கும் போது / வெளிப்படும்போது கர்மாக்கள் குறையவும், அநியாயமான முறையில் / அபரிமிதமாக இருக்கும்போது / வெளிப்படும்போது புதிய கர்மாக்கள் சேரவும் செய்கின்றன...

இந்த புலன்களில் மிக சக்திவாய்ந்த புலன்கள் கண்களும், நாசியும். இவை பிற ஆசைகளைத் தூண்டுவதில் முதலிடம் வகிக்கின்றன. எனவே இவற்றை மிக கவனமாக உபயோகப்படுத்தவேண்டும். இதில் சூழல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

எப்போதும் திறந்திருக்கும் புலன்கள் இரண்டு மூக்கு, செவி. எனவே நுகர்ச்சியும், கேட்டலும் முற்றிலும் நாம் இருக்கும் சூழல் சம்பந்தப்பட்டது.

எனவே நல்ல சூழல் அமைவது புலனடக்கத்துக்கு மிக அவசியம்.

புலனடக்கம் கைகூடினால் ஆன்மீக முன்னேற்றம் எளிதில் சித்திக்கும். அது நம்மை ஞானத்தை நோக்கி இட்டுச்செல்லும்.

கடவுளே மஹாலிங்கம்.. எல்லோருக்கும் புலனடக்கம் கைகூடி ஆன்மீக முன்னேற்றம் சிறப்பா ஏற்பட்டு ஞானம் சித்திக்க அருள் செய்யுங்க...

சதுரகிரியாரே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....

Wednesday, September 21, 2011

எது வறுமைக்கோடு ???

நம் அரசாங்கம் யாரை ஏழை என்று கருதி திட்டங்கள் தீட்டுகிறது என இன்று பேப்பரில் வந்திருக்கிறது... அதன் சுட்டி கீழே...

Spend Rs 32 a day? Govt says you can't be poor



நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு பெருநகரத்தில் ரூ32 க்கு மேல்  செலவு செய்பவர் என்றால் அல்லது ஒரு சிறுநகரத்தில் அல்லது கிராமத்தில் ரூ26க்கு மேல் செலவு செய்பவர் என்றால் நீங்கள் வருமைக்கோட்டுக்கு மேல் வந்து விட்டீர்கள்... எப்பூடி...

இதில் சாப்பாட்டுக்கு , காய்கறிக்கு , எண்ணைக்கு , பாலுக்கு , கல்விக்கு என ஒரு குடும்பம் (4நபர்) எவ்வளவு செலவு செய்வது எனவும் கணக்கு வேறு சொல்கிறார்கள். படிக்கும்போதே தலை சுற்றுகிறது.
 
இந்த இலக்கைக்கூட எட்ட முடியாமல் இருக்கும் அரசு உண்மையில் வெட்கப்பட வேண்டும். பேசாமல் பிச்சைக்காரர்களுக்கு மட்டும்தான் அரசு சலுகைகள் என அறிவித்துவிட்டு போய்விடலாம். (அவர்கள் கூட சண்டைக்கு வந்து விடுவார்கள்.)

அரசாங்கமே ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் நபருக்கு ரூ120 சம்பளம் கொடுக்கிறது (கணக்கு காட்டவாவது). அப்படி பார்த்தால் வருடத்துக்கு 100 நாட்களுக்கு ரூ 12000-00. ஒரு குடும்பத்தில் 2 நபர்கள் இதில் வேலைக்கு சென்றால் வருடத்துக்கு ரூ 24000-00..

அதாவது நம் அரசாங்கம் இந்த ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திலேயே இந்த வறுமையை ஒழித்துவிட்டதாக கணக்கு காட்டுகிறார்கள்...

மக்களைப்பற்றியோ அவர்கள் வாழும் சூழல் பற்றியோ இருக்கும் விலைவாசி பற்றியோ கொஞ்சமும் தெரியாத, அதுபற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத சில பல அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த கோடு கேலிக்கூத்தானது..

இதைக்கூட நாம் சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாக சாதிக்கவில்லை என நினைக்கும் போது வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

நேர்மையாக சிந்தித்தால், இன்றைய விலைவாசியில் ஒரு பெருநகரத்தில் சுமார் ரூ 2,40,000 க்கு குறைவாக செலவு செய்பவர்கள் அனைவருமே வறுமைக்கோட்டுக்கு கீழ் வருபவர்கள்தான். இவர்கள் அனைவரையும் முன்னேற்றதான் நம் அரசாங்கம் பாடுபட வேண்டும். 

இதைவிடுத்து இல்லாத ஒரு வறுமைக்கோட்டை உருவாக்கி அனைவரையும் பொய் சொல்ல வைத்து அவர்களை முன்னேற்ற ஊழல் திட்டங்கள் தீட்டுவதை உடனே நிறுத்த வேண்டும்.. அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு எல்லை விரிவு படுத்தப்பட்டு, பரவலாக்கப்பட்டு பெரும்பான்மை சமூகம் பயனடைய திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.. அவை உடனடியாக செம்மையாக ஊழலின்றி செயல்படுத்தப்பட வேண்டும்... செய்வார்களா நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்????

கடவுளே மஹாலிங்கம்... இந்த அரசியல்வாதிகளுக்கு நல்ல புத்தி குடுத்து நம் மக்கள் முன்னேற சிறந்த திட்டங்கள் தீட்டப்பட்டு செயல் படுத்தப்பட நீங்கதான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே சரணம்... ஓம் நம சிவாய...

Thursday, September 15, 2011

சாமானியனின் உடையும் முதுகெலும்பு..மீண்டும் பெட்ரோல்விலை உயர்வு...

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல் விலை ரூ 3.14 உயர்த்தப்படுகிறது.. செய்தி சுட்டி கீழே :

Petrol prices to be up by Rs 3.14 per litre from midnight

 

இதனால் மீண்டும் விலைவாசி ஏறும்... ஏற்கனவே முதுகெலும்பு ஒடிந்த நிலையில் இருக்கும் நடுத்தர வர்க்க மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.

அரசாங்கம் விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளைப் பார்த்தால்   நகைப்பாகவே இருக்கிறது.. ஒன்று வட்டி வீதத்தை உயர்த்துகிறார்கள். இல்லாவிட்டால் பெட்ரோல் விலையை உயர்த்துகிறார்கள்..

வரி வீதங்களை குறைத்து, அல்லது பரவலாக்கி, எளிமையாக்கி, பதுக்கல்களையும் கள்ள சந்தைகளையும் ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததுபோல தெரியவில்லை.. இது ஒழிக்காமல் எந்த விலைவாசியும் குறையப்போவது இல்லை.

இதனாலான பாதிப்பு இந்த அரசியல்வாதிகளுக்கு இல்லை.. ஏனெனில் பெரும்பாலோனோர் கோடீஸ்வர்கள் மீதமுள்ளோர்களில் விரல் விட்டு எண்ணுபவர்கள், இன்னும் சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் தவிர அனைவரும் லட்சாதிபதிகள்..

எல்லாம் நம் தலைவிதி... இனிமேல் சாப்பாட்டுல சில கவளங்களை குறைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம் என்று பிரச்சாரம் கூட செய்வார்கள் போல தெரிகிறது...

கடவுளே மஹாலிங்கம், இந்த விலைவாசி உயர்விலிருந்து மக்களை காப்பாத்து...

சதுரகிரியாரே சரணம்... சிவ சம்போஹர ஹர மஹாதேவா...






 

Tuesday, September 13, 2011

சட்டத்தின் ஆட்சியும், தர்மத்தின் தேவையும்...

இன்று உலகில் நாகரீக நாடுகளில் நம் இந்தியா உட்பட சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த சட்டத்தின் ஆட்சி நம் தேசத்தில் 1947/50 களில் ஆரம்பித்தபோது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் இருக்கும் வேறுபாடுகள் பற்றி :

1) அன்று ஆட்சியாளர்கள் தவறு செய்ய பயந்தார்கள்... இன்று பயப்படாமல் தவறு செய்கிறார்கள்.

2) உண்மையில் சட்டத்தை பாதுகாக்க அரசாங்கம் செயல்பட்டது அன்று.. சட்டத்தை பாதுகாப்பதுபோல நடிப்பது இன்று..

3) குற்றவாளிகள் உள்ளேயும் ஆட்சியாளர்கள் வெளியேயும் இருந்தனர் அன்று.. சில பல ஆட்சியாளர்களே குற்றவாளிகளாக உள்ளேயும் வெளியேயும் இருப்பது இன்று..

4) ஓரளவுக்கு மனசாட்சிக்கு பயந்தது அன்று... இன்று பணத்துக்கும் பதவிக்குமே முதல் மரியாதை...


நம் சமூகமும் அரசியலும் இப்படிப்பட்ட ஒரு பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதால் நம் இன்றைய சட்டத்தின் ஆட்சி பற்றி சில வரிகள்...

1) பிடிபடாதவாறு தவறு செய்பவர்கள் உத்தமர்கள். பிடிபடுபவர்கள் முட்டாள்கள்.

2) காசு வாங்கிக்கொண்டு காரியம் செய்து கொடுப்பவர்கள் நேர்மையானவர்கள். காசு வாங்கியும் காரியம் ஆகாவிட்டால் அவர்கள் ஊழல்வாதிகள்.

3) தவறு செய்பவர்களைப்பற்றி அரசுக்கு தெரிந்தாலும் வேறு யாராவது புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படும்.. அதுவும் அரசுக்கு தேவையான நேரத்தில் அல்லது சவுகரியமான நேரத்தில்...

4) சாட்சியும் ஆதார ஆவணங்களுமே ஒருவனை குற்றவாளி ஆக்க  முடியும்.

5) பதவிகளில் இருப்பவர்கள் தவறுகள் செய்துவிட்டு சாட்சிகளையும் ஆதார ஆவணங்களையும் அழித்துவிட்டால் அவர்கள் செய்த தவறும் மறைந்து விடும். இன்றைய சூழலில் அவர்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..

6) போதுமான ஆதாரங்கள் இல்லாமல் விடுதலை ஆகும் குற்றவாளிகளும் உத்தமர்கள்தான். சந்தர்ப்ப சூழலில் மாட்டிக்கொள்ளும் உத்தமர்களும் குற்றவாளிகள்தான்...


இந்த சூழலில் நமக்கு சட்டத்தின் ஆட்சியைவிட தர்மத்தின் ஆட்சியே தேவை.  அது என்ன தர்மத்தின் ஆட்சி?

ரத்தின சுருக்கமாக, ஒவ்வொரு மனிதனும் தம் கடமைகளை யாருடைய மேற்பார்வையும் இல்லாமல், சரியாக, நேர்மையாக  செய்து, சக மனிதனை மதிக்க கற்றுக்கொண்டால் நம் தேசம் சுபிட்சமாகும். அதுதான் தர்மத்தின் ஆட்சி..

கடவுளே மஹாலிங்கம் இது நடப்பது உங்க கைலதான் இருக்கு...உடனடியா தர்மத்தின் ஆட்சி நம் தேசத்தில் ஏற்பட அருள் செய்யுங்க...

சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே போற்றி... ஓம் நம சிவாய...

Wednesday, September 7, 2011

தில்லியில் குண்டு வெடிப்பு.. தீவிரவாத கோழைகளின் கோர முகம்..

இன்று 07 செப்டம்பர் 2011 காலையில் சுமார் 10-15க்கு தில்லியில் அதுவும் உயர் நீதி மன்றத்துக்கு அருகில் பயங்கர குண்டு வெடித்ததாக செய்தி வந்துள்ளது. தீவிரவாதிகளின் கோர முகம் மீண்டும் வெளிப்பட்டு நம்மை பயமுறுத்த வந்துள்ளது... இந்த கோழைத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கும் அதே வேளையில், தீவிரவாதிகளை கனிவுடன் அணுகும் அரசின் அணுகுமுறைகளையும் கண்டிக்கவேண்டி இருக்கிறது.

தீவிரவாதிகளுக்கு கடும் தண்டனைகளை, காலதாமதமில்லாமல் வழங்க வழி இல்லாத நம் நீதி பரிபாலனை முறையும் விசாரணை முறைகளும் மறு பரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது. 

ஒவ்வொருமுறை குண்டு வெடிக்கும் போதும் நம் மந்திரிகள் சொல்லும்  சால்ஜாப்பும், ஆறுதல் வார்த்தைகளும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன. கையாலாகாதவர்களுக்கு ஆட்சி செய்ய என்ன அதிகாரம் இருக்கிறது என்று தெரியவில்லை.

கடவுளே மஹாலிங்கம் நீங்கதான் ஒரு நல்ல வழி காட்டணும்... தீவிரவாதம் இல்லா ஒரு உலகம் உருவாக அருள் செய்யணும்..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்... ஓம் நம சிவாய...

Tuesday, September 6, 2011

குழந்தைகளைக் கொல்லும் அரசு மருத்துவமனைகள்....

இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகள் இறந்தது ஒரு சிறு செய்தியாக வந்தது. இன்று வேறு செய்திகளின் சுழலில் அடித்து செல்லப்பட்டு விட்டது...

Andhra infant deaths: hospital ill equipped, says govt

இது பற்றி கருத்து கூறிய ஒரு ஆந்திர அமைச்சர் இது கடவுளின் செயல் என கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்.

மேலும் சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் சுமார் 18 (இறுதி எண்ணிகை 26) குழந்தைகள் அரசு மருத்துவமனையில் இறந்தது பெரிய செய்தியாகி பிறகு அடங்கி விட்டது.

 இதே மேற்கு வங்கத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு குழந்தை எறும்புகள் கடித்து அரசு மருத்துவமனையில் இறந்த செய்தி நெஞ்சை நடுங்கச்செய்தது.

'Ant bite' death: Body of newborn exhumed

இந்த குழந்தையை இன்குபேட்டரில் வைக்கும்போது அங்கு இருந்த எறும்புகளைப் பார்த்த குழந்தையின் உறவினர் மருத்துவமனை ஊழியர்களிடம் கூறியபோது அது சாதாரணமானதுதான் என பதிலுரைத்ததாகவும் செய்தியில் உள்ளது.

இதுதான் நம் தேசத்தின் அரசு மருத்துவமனைகளின் லட்சணம். இது ஏதோ பிற மாநிலங்களில்தான் இப்படி என எண்ண வேண்டாம். நம் தாய்த் தமிழகத்திலும் இதே நிலைதான்.. அதுவும் குழந்தைகளின் பராமரிப்பில் இருக்கும் அலட்சியம் அதிர வைக்கிறது.

நம் அரசாங்கங்கள் நம் மக்களுக்கு டீவி, கிரைண்டர், லேப்டாப், மிக்சி இலவசமாக வழங்குவதற்கு பதிலாக இப்படிப்பட்ட  அரசு மருத்துவமனைகளை சிறப்பாக பராமரித்து நல்ல சேவை வழங்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.

ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள். இப்போது  அங்கும் குழந்தை பிறந்தால், ஆபரேசன் செய்தால், மருத்துவமனை  ஊழியர்களையும் தனியாக “கவனிக்க” வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இதை அந்த தனியார் மருத்துவமனைகளும் ஊக்குவிக்கின்றன. இங்கு அனைத்து ஊழியர்களுக்கும் மோசமான சம்பளம்தான் தருகிறார்கள்.

வசதி இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைகளை நாடுகிறார்கள். ஸ்டான்லி போன்ற அரசு மருத்துவமனைகள் ஓரளவுக்கு சிறப்பான மருத்துவ வசதி அளித்தாலும், கீழ் மட்டத்தில் இருக்கும் லஞ்ச ஊழல் கிஞ்சித்தும் இரக்கமில்லாமலும், பாரபட்சமில்லாமலும் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. 

அரசு மருத்துவமனைகள் குறித்து நான் ஜனவரி 12,2011ல் எழுதிய பதிவின் சுட்டி கீழே :

அரசு மருத்துவமனைகள் - ஒரு தேவை.....

நம் அரசாங்கம் மக்களுக்கு தரமான மதுவகைகளை வழங்க செலவு செய்யும் நேரத்தில் ஒரு சிறு பகுதியாவது தரமான மருத்துவ வசதிகள் வழங்க செலவு செய்தால் நன்றாக இருக்கும்.. செய்வார்களா???

கடவுளே மஹாலிங்கம் நீங்கதான் இந்த அரசாங்கங்களோட கண்ண திறந்து இதுக்கு ஒரு நல்ல வழி செய்யணும்.

சதுரகிரி நாதனே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Monday, September 5, 2011

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...

இன்று ஆசிரியர் தினம்...எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற சான்றோர் வாக்குக் கிணங்க, வாழும் இறைவனாம் நம் ஆசிரியப் பெருமக்களுக்கு எம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

இந்த இனிய தருணத்தில் என் நெஞ்சில் இடம் பிடித்த என் ஆசிரியர்கள் சிலரைப்பற்றி... 

எனக்கு பாடம் படிப்பித்த எல்லா ஆசிரியர்களும் முக்கியமானவர்கள் ஆனாலும் அவர்களில் மிக முக்கியமான சிலரைப்பற்றி நான் பகிர்ந்துகொள்கிறேன்...

1) என் தமிழாசிரியர் - திரு அந்தோணிமுத்து, புனித ஸ்தனிஸ்லாஸ் உயர்நிலைப்பள்ளி சாத்தூர்..

என் மனதில் தமிழார்வம் கொஞ்சம் ஏற்பட தூண்டுகோலாக இருந்தவர்..எங்கள் உயர்நிலைப் பள்ளியில் நான் படித்த போது (1982-1987) எனக்கு தமிழ் படிப்பித்த ஆசான். இன்னும் நான் தமிழில் ஓரளவுக்கு எழுதுவதற்கு உசிலம்பட்டியை பூர்வீகமாகக்கொண்ட இவர் ஒரு மூல காரணம்...

2) என் +2 கணித ஆசிரியர் திரு வெங்கட் ராமன் 

இவர் எனது +2 டியூசன் ஆசிரியர்...  சாத்தூரில் இவர் நடத்திய +2 கணித டியூசன் மிக பிரபலம் அப்போது... நான் கணிதத்தில் நல்ல மதிப்பெண் எடுத்து பொறியியல் சேர காரணமாக இருந்த பேராசான்... 

3) என் +2 தமிழாசிரியர் திரு மா பாலகிருஷ்ணன் , SHN எட்வர்ட் மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்.. 

எனக்கு +2வில் தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசான்.. இவரை நான் சில சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்தியும் இருக்கிறேன்... அதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எனக்கு நல்ல புத்தி புகட்டியவர். நான் பல முறை இவரிடம் மன்னிப்பு கேட்க முயற்சி செய்தேன். முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் இவரிடம் என் மனமாற மன்னிப்பு கேட்கிறேன்... மன்னியுங்கள் சார்...

4) என் கல்லூரி புராஜக்ட் கைட் பேராசிரியர் முருகானந்தம் , தியாகராசர் பொறியியற் கல்லூரி , மதுரை..

இவரைப் போன்ற இனிய மனிதரைக் காண்பது மிகவும் அரிது.. இன்னும் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இவர் என் கல்லூரி புராஜக்ட் நல்ல முறையில் வர மிகவும் பாடுபட்டவர்... 

5) என் கல்லூரி பேராசிரியர் முரளீதரன்

கல்லூரியில் மாணவர்களுடன் மிகவும் தோழமையுடன் பழகும் ஒரு அபூர்வ மனிதர்.. என் நினைவில் இன்னும் வாழும் இவரும் என்னால் மறக்க முடியாத ஒருவரே...


அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் மீண்டும் என் வாழ்த்துக்கள்...

கடவுளே மஹாலிங்கம்... நம் ஆசிரியப் பெருமக்கள் நல்ல மன நிம்மதியோடு மேலும் சிறப்பாக பணி செய்து ஒரு சிறப்பான சமூக அமைய நீங்கதான் அருள் செய்யணும்..


சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே சரணம்...

Monday, August 29, 2011

திரு அன்னா ஹசாரே போராட்டத்தால் விளைந்த நன்மைகள்...

ஒரு வழியாக திரு அன்னா ஹசாரே தன் போராட்டத்தை முடித்துக் கொண்டுவிட்டார். இந்த போராட்டத்தினால் ஊழல் ஒழிப்புக்கு ஒரு புது சட்டம் வரப்போகின்றது. இந்த விசயத்தைத் தவிர இதனால் மேலும் சில நன்மைகளும் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது... அது பற்றி....


1) முதலில் ஜனநாயகத்தை விட்டு, ஓட்டுகூட போடாமல் விலகி இருந்த இளைய சமுதாயத்தினரின் ஒரு பகுதியினரை வீதிக்கு வரவழைத்தது...

2) ஜனநாயகத்தில் இனி இளைய சமூகமும் ஓரளவுக்கு பங்குபெறும் என்ற நம்பிக்கையை என்போன்ற சில சமூக கவலை இருப்போரிடம் ஏற்படுத்தியது.

3) நம் குரலுக்கும் நம் ஜனநாயகத்தில் இனி மதிப்பிருக்கும் என்ற ஒரு கருத்தை இளைய தலைமுறைக்கு கொடுத்தது...

4) போராட்டம் என்றால் ஏதோ பெரிய தியாகம் என்ற மனப்பான்மையை மாற்றி, ஓய்வு நேரத்தில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி ஊர்வலம் போனாலே நம் எதிர்ப்பை காட்டும் போராட்டமாக்கலாம் என் ஒரு புது வழியைக் காட்டியது.

5) ஒரு கார்பரேட் ஈவண்ட் போன்ற போராட்டங்களும் நடத்த முடியும் என காட்டியது..

6) பொது மக்களின் குரலையும் பாராளுமன்றம் கேட்டாக வேண்டும் என்ற ஒரு முன்னுதாரணம் ஏற்படுத்தியது(?????)

7)  பாராளுமன்றத்துக்கு ஊழலை ஒழிக்கும் உத்தேசமே இல்லை என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது..

8) எனவே நம் போராட்டம் இன்னும் பெரிதாக  இன்னும் உத்வேகத்துடன் இருக்கவேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தியது.



அந்த மஹாலிங்கம்தான் இந்த போராட்டங்களுக்கு ஒரு உத்வேகம் கொடுத்து இன்னும் பெரிய அளவில் மாற்றங்கள் வர அருள் செய்யணும்...

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா....

Saturday, August 20, 2011

லஞ்ச ஊழல் ஒழிப்பு.. எவ்வாறு சாத்தியம்..

இப்போது திரு அன்னா ஹசாரே ஜன் லோக்பால் வர உண்ணா விரதம் இருக்கிறார். என்னைப் போல் நிறைய பேர், இந்த சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, லஞ்ச  ஊழல் விவகாரத்தில் தம் எதிர்ப்பை தெரிவிக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்து ஆதரிக்க வைத்துவிட்டார்கள்.

இன்று லஞ்சமும் ஊழலும் நீக்கமற நம் தேசம் முழுதும் உள்ள அரசு எந்திரங்களில் இருக்கிறது. இதை ஒரு சட்டத்தின் மூலம் ஒழிக்க முடியும் எனில் இந்த அளவுக்கு லஞ்ச ஊழல் இருக்க வாய்ப்பில்லை. உண்மையில் ஊழல் ஒழிப்பு என்பது எப்படி சாத்தியப்படும்? குறைந்த பட்சம் மக்களை நேரடியாக பாதிக்கும் கீழ்மட்ட லஞ்ச ஊழலை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?  என் சிந்தனையின் பல நாள் கனவு....

ஒரு பெரிய பூசணிக்காயை எப்போதும் முழுமையாக அப்படியே சாப்பிட முடியாது.. ஆனால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சமைத்தால் சுலபமாக சாப்பிடலாம்.

இதுபோலவே, லஞ்ச ஊழல் ஒழிப்பும் நம் தேசத்தில் இருக்கும் ஒரு கோடியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சிறுது சிறிதாக நாடு முழுவதும் பரவ வேண்டும்.

1) முதலில் ஒரு சில சட்ட மன்ற அல்லது நாடாளுமன்ற தொகுதிகளில் சில நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஏரியா கவுன்சிலரில் இருந்து பாராளுமன்ற  உறுப்பினர் வரை. இதை செய்வது கடினம் என்றாலும் குறைந்தது 2-3 தொகுதிகளிலாவது நம் பிரபல சமூக ஆர்வலர்கள் தேர்தல் நேரத்தில் கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்தால் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது.

2) அவர்களுக்கு உதவ முழு நேரப்பணியாளர்களாக ஒரு ஊழல் ஒழிப்பு படை ஏற்படுத்தப்பட வேண்டும். இது முடிந்த அளவுக்கு நேர்மையும் சமூக ஆர்வமும் இருப்பவர்களால் ஏற்படுத்தப்பட வேண்டும். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ராணுவத்தினர், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், சமூக அர்ப்பணிப்பு உள்ள இளைஞர்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட வேண்டும்.  மேலும் ஒவ்வொரு குடியிருப்பிலும் இருக்கும் வட்டார நல சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு அதற்கு செயல் பொறுப்பில் நேர்மையானவர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படையாக செயல் பட வேண்டும்.

3) இவர்களில் தேவையானவர்களுக்கு சம்பளம் அந்த அந்தப் பகுதிகளில் இருக்கும் வியாபார, தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

4) இவர்களின் முழு நேரப் பணி, லஞ்சம் ஊழல், அதிகார துஷ்பிரயோகம்  நடைபெறும் இடங்களில் கண் காணிப்பு செய்வது மற்றும் பொது மக்களுக்கு ஆதரவாக உதவியாக செயல்படுவது. உதாரணம் - தாலுகா அலுவலகங்கள், வணிக வரி அலுவலகங்கள், கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்கள், காவல் நிலையங்கள், வட்டார வழங்கல் அலுவலகங்கள், நியாய விலை கடைகள், கூட்டுறவு கொள்முதல் நிலையங்கள், வட்டார போக்கு வரத்து அலுவலகங்கள் மற்றும் பல அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடங்கள். 

5)  இங்கு நடைபெறும் பணிகளில் ஏற்படும் தொய்வுகளுக்கு இந்த மக்கள் படையினர் நேரடியாக தலையிட்டு சமாதான முறையில் நேர்மையான பணி நடைபெற ஏற்பாடு செய்யலாம். முடியாத பட்சத்தில், அந்த ஏரியாவில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்மையான மக்கள் பிரதிநிதியை அழைத்து அவர் மூலம் தீர்வு காணலாம். தேவைப்பட்டால் மேலும் ஊழல் ஒழிப்பு படையினரைத்திரட்டி ஒரு போராட்டம் செய்யலாம்.

6) ஒவ்வொரு மாதமும் இந்த படையினர் சிறு சிறு குழுக்களாக சந்தித்து தாங்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளைப் பற்றியும் அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கலாம். இதில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யலாம். இந்த கலந்துரையாடலில் லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரியும், சட்ட ஒழுங்கு காவல் உயர் அதிகாரியும் கலந்துகொண்டு அவர்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.

7) பொது மக்கள் அரசு அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு ஏற்படும் தாமதங்களுக்கு இந்த படையினரை அணுகி புகார் செய்யலாம். இந்த படையினர் சம்பந்தப்பட்ட துறையினருடன் அது பற்றி மேல் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

8) இந்த நடைமுறையில் பிடிபடும் லஞ்ச ஊழல் அதிகாரிகளுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.

9) இந்த நடைமுறையில் தவறு செய்ய முற்படும் பொது மக்களுக்கும் கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் பொதுமக்களும் ஓரளவுக்கு நேர்மையாக நடந்துகொள்ள முன்வருவார்கள்.

10) உள்ளூர் கட்டுப்பாடுகள் சில நிறைவேற்றி அதை முழுமையாக அனைவரும் கடைபிடிக்க செய்ய வேண்டும்.

11) மக்கள் நேர்மையையும் ஒழுங்கையும் வெளிப்படையாக காண்பிக்கும்போது தமக்குள் ஒரு நல்ல உணர்வு ஏற்பட்டு அது நம் சமூகத்தில் பிரதிபலிக்கும். (இதைத்தான் நம் முன்னோர் அந்த காலத்தில் ஊர்கட்டுப்பாடு என ஒரு கொள்கை வைத்திருந்தனர். ஆனால் அதன் நோக்கம் பிற்காலத்தில் சக மனிதனை நசுக்குவதில் சென்று முடிந்து விட்டது)

12) இந்த முறைகள் மூலம் அந்த ஒரு சில தொகுதிகளில் ஓரளவுக்கு மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது.

13) இதே தொகுதிகளில் மாற்றம் விரும்பும் பிற தொகுதியினரும் கலந்துகொண்டு பயிற்சி எடுத்து தமது தொகுதிகளில் செயல் படுத்த முற்பட வேண்டும்.

14) இந்த சங்கிலித்தொடர் நடவடிக்கை முதலில் ஒரு மாநிலத்திலும் பிறகு அணடை மாநிலங்களிலும் பிறகு தேசம் முழுவதும் பரவ ஒரு வாய்ப்பு இருக்கிறது.

15) இதற்கு குறைந்தது சில பத்தாண்டுகள் தேவைப்படும். ஒரு தலைமுறையில் நாம் சிரமப்பட்டு இதை செய்துவிட்டால் அடுத்து வரும் தலைமுறையினர் ஓரளவுக்கு இந்த லஞ்ச ஊழலில் இருந்து விடுபட ஒரு வாய்ப்பு வரும். எனக்கு நிச்சயம் இதில் நம்பிக்கை இருக்கிறது.

ஊர் கூடி தேர் இழுப்போம்.. லஞ்ச ஊழலை ஒழிப்போம்...


கடவுளே மஹாலிங்கம்... நீங்கதான் இந்த லஞ்ச ஊழல் அரக்கன் ஒழிந்து நம் தேசம் சுபிட்சமாக அருள் செய்யணும்..


சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி.... ஹர ஹர மஹாதேவா சரணம்....

Tuesday, August 16, 2011

அரசாங்கத்திடம் இருந்து பொதுமக்களுக்கு ஒரு செய்தி..

இன்று (16 ஆகஸ்ட் 2011) காலை திரு அன்னா ஹசாரே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் திரு கிரண்பேடி, திரு அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் நம் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அனுப்பும் மறைமுக செய்தியை இப்போது எழுத்தில் வடிக்கிறேன். இது நாட்டு நடப்பை உற்று கவனிக்கும் ஒரு சாமானியனின் பார்வையே :

என் அன்பான குடி மக்களே, இந்த ஜனநாயகம் என்பது வோட்டுப் போட்ட வுடன் உங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாது. ஒரு ஓட்டு போட்டவுடன் உங்கள் ஜனநாயக கடமை முற்றிலும் முடிந்து விட்டது. அதன் பிறகு உங்களுக்கு அரசாங்கமாகிய எங்களை கேள்விகேட்க எந்த அதிகாரமும் இல்லை.

எங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதுவே சரி. அது உங்களை குழி தோண்டிப் புதைப்பதாக இருந்தால்கூட அதை நீங்கள் கேள்வி கேட்க உரிமை அற்றவர்கள். நாங்கள் விஷத்தை அமிர்தம் என்று கூறிக் கொடுத்தால்கூட அதை கேள்வி கேட்காமல் நீங்கள் குடிக்கத்தான் வேண்டும். அது இந்த தேசத்தின் குடிமகனாகிய உங்கள் ஜனநாயக கடமை. இதை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், நீங்கள் தீவிரவாதிகள், ஜனநாயக விரோதிகள், நக்சலைட்டுகள.

உங்களுக்காக அரசாங்கத்தின் ஜெயில்கள் காத்திருக்கின்றன. உங்கள் பொருளாதார ஆதாரங்கள் நசுக்கப்படும். நீங்கள் ஊழல்வாதிகளாக விளம்பரப்படுத்தப் படுவீர்கள். உங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும். உங்கள் அனைத்து வங்கிக் கணக்குகளும், பாஸ்போர்ட்டும் முடக்கப்படும்.  திடீரென்று நீங்கள் வெளிநாட்டுக்காரராகவும் ஆக்கப்படலாம். நீங்கள் எங்கள் வீட்டு வாசலில் வந்து எங்களை விட்டு விடுங்கள் என்று பிச்சை எடுக்கவேண்டும். அது வரை நீங்கள் துரத்தப்படுவீர்கள்.

இதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டும் போராட்டங்கள் நடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களும் நாங்கள் கொடுக்கும் அனைத்து கட்டுப் பாடுகளும் நிறைந்த 100 பக்க பாண்டு பேப்பரில் கையொப்பமிட வேண்டும். அதை கடைபிடிக்கவும் வேண்டும்.

சட்டம் என்ன சொல்லி இருந்தாலும் நாங்கள் சரி என்று நினைப்பதை மட்டுமே செய்வோம். மேலதிக விவரங்களுக்கு நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம். அதன் தீர்ப்பு சில பத்தாண்டுகளில் அல்லது நூற்றாண்டுகளுக்குள் வழங்க ஆவன செய்யப்படும். அதுவரை நீங்கள் எது செய்தாலும் கைது செய்து மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் பின்னும் போராட்டம் நடத்த முன்வரும் தைரிய சாலிகளுக்கு ஒரு முன் எச்சரிக்கை. பின் விளைவுகளுக்கு அரசாங்கம் பொறுப்பாகாது. அதை முன் கூட்டியே எச்சரிக்கவே இந்த செய்தி...



கடவுளே மஹாலிங்கம். நாட்டு மக்களைப் பற்றியும் சிந்திக்கிற ஒரு அரசாங்கம் அமைய அருள் செய்யுங்க.

சதுரகிரி நாதனே போற்றி!! சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா !!!!

Wednesday, August 3, 2011

அன்னதானம்....

தானத்தில் சிறந்தது அன்னதானம். ஒருவனை போதும் என்று சொல்ல வைக்கக் கூடிய தானமும் இதுதான். ஒரு அளவுக்கு மேல் ஒரு சாதாரண மனிதனால் சாப்பிட முடியாது. 

மேலும் அன்னதானம்தான் மனிதனுக்குள் ஆன்மாவாக இருக்கும் கடவுளுக்கு படைக்கப்படும் படையல். உண்மையான மானுட சேவை. இதில் இருக்கும் ஆன்மீக சூட்சுமம் அளவிட முடியாதது. அன்னதானம் செய்வதாலும், அதில் கலந்துகொள்வதாலும், அதில் நமது பங்களிப்பை செலுத்துவதாலும் பலவித ஆன்மீக நன்மைகள் சூட்சுமமாக ஏற்படும்.

பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் இப்போது அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. எல்லாமே சிறப்புக்குறியதுதான் என்றாலும் நான் கண்டு வியந்த ஒரு சில அன்னதானங்களைப் பற்றிய பதிவு இது.

1) 2009ம் ஆண்டு எனது சீக்கிய நண்பர் ஒருவர் என்னை மஹாராஷ்ட்ராவில் உள்ள நாண்டெட் என்ற சீக்கியர்களின் புனித தலத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருக்கும் குருத்துவாரக்களில் (சீக்கியர்களின் கோவில்) நடைபெறும் அன்னதானம் ஈடு இணையற்றது. வீட்டு சாப்பாட்டின் சுவையுடன் சுத்தமும் சுகாதாரமுமான சூழலில் மிகவும் அற்புதம். அங்கு சேவை செய்பவர்களின் கனிவான கவனிப்பும் அற்புதம். 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து அவர்கள் செய்யும் அன்னதானத்தில் நானும் கலந்துகொண்டு சாப்பிட்டு, சேவையில் ஈடு படுத்திக் கொண்டு மகிழ்ந்தேன்.

2) 2003ம் ஆண்டு எனது நண்பர் ஒருவர் செங்கல்பட்டில் உள்ள அகத்தியர் ஆலயத்தில் வைத்து நடத்தி வரும் அன்னதானத்திற்கு அழைத்தார். பல ஆண்டுகளாக தொடர்ந்து செயல் பட்டு வரும் அன்னதானம் அது. நண்பர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தங்களால் முடிந்தவற்றை வைத்து, தாங்களே சமையல் செய்து அன்னதானம் அளித்தது அதிசயமாக இருந்தது. பிச்சைக்காரர்களும், வயதானவர்களும், குழந்தைகளும் அதிகம் கலந்து கொண்ட அந்த அன்னதானம் நண்பர்களின் கனிவான கவனிப்பாலும் அற்பணிப்பு உணர்வாலும் என் நினைவில் நின்று விட்டது.

3) சதுரகிரிக்கு நான் செல்லும்போதெல்லாம் அங்கு உள்ள கஞ்சி மடத்தில் நடைபெறும் அன்னதானத்தில்தான் சாப்பிடுவேன். அங்கு இருப்பவர்கள் வருபவர்கள் அனைவருக்கும் சளைக்காமல் உணவு வழங்கும் அவர்களின் சேவை உணர்வு பாராட்டுக்கு உரியது.

இவை தவிரவும் பல இடங்களில் நான் அன்ன தானத்தில் கலந்துகொண்டிருந்தாலும், இவை மூன்றும் அன்னதானத்துக்கு உதாரணமாக என்னால் கருதப்படுபவை. எனவே பகிர்ந்துள்ளேன்.

கடவுளே மஹாலிங்கம், இந்த உலகில் அன்னதானம் நிறைய நடைபெற்று ஒரு பசி இல்லாத உலகம் உருவாக அருள் செய்யுங்க...

சதுரகிரி நாதனே சரணம்....சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா....